10 மாதங்களாக மூடப்பட்டிருந்த அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி புதிய அதிபர் நியமனத்துடன் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் புதிய அதிபராக ஜனூர்டீன் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். தொழில்நுட்பக் கல்வி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திரலால் அம்பேவத்தவினால் இந்நியமனம் வழங்கப்பட்டது.
இலங்கை தொழில்நுட்பக் கல்விச் சேவையின் 3ஆம் தர அதிகாரியான இவர் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பல வருடங்கள் ஆங்கில விரிவுரையாளராக கடமையாற்றினார்.
கடந்த 10 மாதங்களுக்கு முன் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் நியமனத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் தொழில்நுட்பக் கல்லூரி மூடப்பட்டது. கடந்த 10 மாதங்களாக இயங்காமல் இருந்த தொழில் நுட்பக் கல்லூரி புதிய அதிபர் நியமனத்துடன் நேற்று திறக்கப்பட்டது.
தொழில் நுட்பக் கல்விச் சேவையில் இல்லாத ஒருவர் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில் அதிபராக கடமையாற்றிய நிலையில், தொழில் நுட்பக் கல்விச் சேவையை சேர்ந்த ஹசன் அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். இதன் பின் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் தொழில்நுட்பக் கல்லூரி மூடப்பட்டது.
அமைச்சர் அதாவுல்லா, அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கிடையில் கடந்த வாரம் அமைச்சில் இடம்பெற்ற நல்லிணக்க பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கை தொழில்நுட்பக் கல்வி சேவையின் அதிகாரியான ஜனூர்டீனை அதிபராக நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் புதிய அதிபர் நியமிக்கப்பட்டு அவர் நேற்று கடமையை பொறுப்பேற்றார். அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி மூடப்பட்ட நிலையில் அதில் கடமைபுரிந்த உத்தியோகத்தர்கள் அம்பாறை, சம்மாந்துறை, மட்டக்களப்பு போன்ற தொழில் நுட்பக் கல்லூரிகளில் தற்காலிகமாக கடமை புரிந்து வந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக