(இக்பால் அலி)
தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக மத ரீதியிலான அபிப்பிராயங்கள் பிணக்குகள் எழுந்துள்ளன. இதனுடைய உள்நோக்கமாக இருப்பது பொருளாதாரம் அதீத அச்சம், பொறாமை என்பனவாகும். இது எந்தக் கலவரத்தின் போதும் உள்நோக்கத்தின் பின்னணியாக வர்த்தகமே உரித்துடையதாக இருப்பதை நாங்கள் பார்க்கின்றோம் என்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மாவனல்லை நயாவல ஹமீதியா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் நயாவலப் பிரதேசத்தில் கல்வித்துறையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும், பல்கலைக்கழம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பள்ளியின் நிர்வாக சபைத் தலைவர் தாஹீர் ஹாஜியார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,,
சட்டக் கல்லூரி நுழைவு சம்மந்தமாக எழுந்துள்ள பிரச்சினை சம்மந்தமாக ஆராய்ந்து பார்த்தால் அதுவும் அப்படியான நோக்கத்தைக் கொண்டதாகும். இன்று எல்லாமே வர்த்தக மயம். மாணவர்களை பரீட்சைக்குத் தயார் படுத்துதல் என்பது கூட வர்த்தக மயமாய் உள்ளன.
வேண்டும் என்றே இனவாத அடிப்படையில் வலிந்து முஸ்லிம் சமூகத்தைச் சண்டை இழுக்கின்றனர். ஒரு அபாயகரமான கால கட்டம் இருந்து கொண்டிருக்கிறது. இதனை சரியாக மேலிடம் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும். ஹலால் விவகாரம் பாரிய பிரச்சினையாக எழுந்துள்ளன. சரியாக அத்தாட்சிப்படுத்துகின்ற விடயம் துரதிஷ்டவசமாக சர்ச்சைக்குரியதாக உள்ளன. இது குறித்து எவ்வளவோ விளக்கமளித்து அதனை விளங்கி ஏற்றுக் கொளவதாக இல்லை. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து முஸ்லிம்களுடைய வியாபார நிலையங்களுக்கு ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளனர்.
என்னுடைய பார்வையில் இதற்கு வெளிநாட்டுச் சக்திகள் சம்மந்தப்பட்டிருக்கலாம் எனக்கருதுகிறேன். இந்த நாட்டில் இனக் கலவரத்தை ஒரு யுத்தத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு ரீதியாக விளைவுகளை ஏற்படுத்த திட்டமிட்ட அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது குறித்து சட்டக் கல்வி தொடர்பாகவும் எதிர்வரும் எட்டாம் திகதி உரையாற்றவுள்ளேன் இதனை தர்க்க ரீதியாக அல்லாமல் விவாத ரீதியாக அல்லாமல் அறிவு சார் ரீதியாகத்தான் இதனை அனுக வேண்டியுள்ளது.
மானவல்லை நகர் இது போன்ற சவால்களுக்கு முகம் கொடுக்கப்பட்டு மீண்டும் கட்டிஎழுப்பப்பட்ட நகர். கல்வித்தறையில் மீளவும் உரிய பௌதீக வளங்கள் இல்லாமல் மீளவும் சிறப்புப் பெற்று வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் பேராதனை பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ;ட விரிவுரையாளர் சைபுதீன் மாவனவ்லை பிரதேச சபை உறுப்பினர் முஹமட் கப்பார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.