அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 25 ஆகஸ்ட், 2012

தமிழ் மக்கள் அரசுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் வேட்பாளர்கள் எவரும் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படமாட்டர்கள்-சம்பந்தன்


நமது செய்தியாளர்
தமிழ் மக்கள் அரசாங்க கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் வேட்பாளர்கள் எவரும் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படமாட்டர்கள் எனவே அரசாங்க கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன் உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பேச்சியன் ஆலய முன்றலில் நேற்று (24.8.2012) மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய தலைவர் சம்பந்தன் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்க கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது.
ஒரு சில தமிழ் மக்கள் அரசாங்க கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் அரசாங்க கட்சியில் போட்டியிடுகின்ற எந்த வொரு தமிழரும் தெரிவு செய்யப்படமாட்டார்கள். மாறாக தமிழ் மக்கள் அரசாங்க கட்சிக்கு அளிக்கும் சொற்ப வாக்கு அரசாங்க கட்சிக்கு உதவும் ஆனால் தமிழர் எவரும் தெரிவு செய்யப்படமாட்டார்கள் இதன் மூலம் வேறு இனத்தவர் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களே உண்டு எனவே தான் அரசாங்க கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது.
இந்த விடயத்தை அவர்களுக்கும் எடுத்துக் கூறி அவர்களையும் எமக்கு வாக்களிக்க வைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அவசியமான வடமாகாண சபை தேர்தலை நடாத்தவில்லை. வட மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்காக பல திகதிகளை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இப்போது 2013 அடுத்த ஆண்டு புறட்டாதி மாதம் வட மாகாண சபை தேர்தலை நடாத்தப் போவதாக கூறுகின்றனர். வட மாகாணம் தமிழ் மக்களுள்ள மாகாணம் அங்கு தேர்தலை நடாத்தினால் நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைந்து விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருப்பதனாலும் அவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்றார்கள் என்ற கருத்து வெளிவரும் சர்வதேசத்தில் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை பொறுத்த வரையில் அவர்களுக்க பலமாக அமையும் அதனால் வடமாகாண சபை தேர்தலை வைக்கப் போவதில்லை. தேர்தலை வடமாகாணத்தில் வைப்பது தங்களுக்கு உதவப் போவதில்லை என்பதை அரசாங்கம் கருதுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் மத்திய அரசாங்கத்தில் ஒரு பங்காளியா இருப்பதனால் கிழக்கு மாகாண சபையை கலைத்து அங்கு ஒரு தேர்தலை நடாத்தினால் அரசாங்கம் இலகுவாக வெற்றி பெறலாம் என ஜனாதிபதி எதிர் பார்த்தார்.சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது தற்போது செலுத்துகின்ற அலுத்தங்களுக்கு பதில் கூற வேண்டும். மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள், மக்கள் எம்மை ஆதரிக்கின்றார்கள், மக்கள் எம்மை தெரிவு செய்திருக்கின்றார்கள், மக்கள் எம் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் ஏன் எங்கள் மீது அளுத்தங்களை செலுத்துகின்றீர்கள்? அதை நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் கூறுவதற்காகத்தான் இந்த தேர்தலை நடாத்துகின்றோம் என அமைச்சர்கள் பகிரங்கமாக கூறுகின்றனர்.
கிழக்கு மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடாத்துவதற்கான ஒரே ஒரு காரணம் இது தான். துரதிஷ்ட வசமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கேட்பதென்ற முடிவை எடுத்த பிறகு முஸ்லிம்கள் மத்தியில் அது ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிவாக அமையவில்லை.
முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. காணி மற்றும் பாதுகாப்பு தொழில் மற்றும் தங்களது பள்ளிவாயல்கள் மற்றும் கலாசாரம் தொடர்பான பிரச்சினைகள் அவர்களுக்குள்ளன. இந்த மாகாண சபையின் ஒழுங்கு தமிழ் மக்களின் நீண்ட கால போராட்டத்தின் காரணமாக உற்பத்தியான ஒரு ஒழுங்கு அதிகார பகிர்வை எதிர்த்த மத்திய அரசாங்கத்துடன் நாங்கள் சேர்ந்து நாங்கள் தமிழர்களுக்கு எதிராக போட்டியிட்டால் அதை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரு பகமை எங்களுக்குள் ஏற்படும் என்ற காரணத்தினையும் முஸ்லிம் மக்கள் கூறினார்கள் இவ்வாறான காரணங்களினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று தனித்து போட்டியிடுகின்றது.
அரசாங்கம் முன்னர் எதிர்பார்த்தது போன்று இலகுவாக வெற்றியடையக் கூடிய நிலைமை இந்த தேர்தலில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதனால் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் ஒரு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் இன்று முன் நிலையில் நிற்கின்றது. கூடுதலான உறுப்பினர்களை பெறுகின்ற கட்சியாகவும் கூடுதலான வாக்குகளை பெறுகின்ற கட்சியாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. வடமாகாண தேர்தலை நடாத்தியிருந்தால் எந்த முடிவு வந்திருக்குமோ அதே முடிவு கிழக்கு மாகாண சபை தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வந்து விடும் சர்வதேச சமூகத்திற்கு அந்த முடிவு பலம் கொடுத்திருக்கும் சர்வதேச சமூகத்தை ஏற்றக்கொள்ள வைத்து விடும் என்ற பயம் அரசாங்கத்திற்குண்டு.
சர்வதேச சமூகத்தினுடைய பங்களிப்பை அவர்களுடைய தீர்மானத்தின் மூலமாக நிறைவேற்றுதற்கு தமிழ் மக்களுடைய தீர்வு அமையப்போகின்றதா அல்லது இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு முன்னாள் ஒரு சாட்டைக் கூறுவதற்கு/ஒரு தவறான கருத்தை கூறுவதற்கு வசதியாக தமிழ் மக்களுடைய தீர்வு அமையப்போகின்றதா இல்லையா என்பது தான் தமிழ் மக்கள் முன்னிலையிலுள்ள ஒரே ஒரு கேள்வியாகும்.
இதை சரியாக தமிழ் மக்கள் விளங்கி வாக்களிக்க வேண்டும் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளிக்க வேண்டும் குறைந்தது 75 அல்லது 80 வீதம் வாக்களிப்போமாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எட்டு உறுப்பினர்களை பெறலாம்.
அம்பாறையில் 3 ஆசனங்களையும் திருகோணமலையில் 5ஆசனங்களையும் பெறுவதற்கான சந்தாப்பமுண்டு. அதே போன்று இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க கூடிய சந்தர்ப்பமுண்டு.
இதில் போனஸ் ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுவதற்காக நாம் கூடுலான வாக்குகளை அளிக்க வேண்டும் என சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்கள் பலரும் உரையாற்றினர்.

பொம்மை ஆட்சியா? அதிகாரத்துடன் கூடிய நல்லாட்சியா? மக்களே தீர்மானிக்கட்டும்!


கிழக்கு மாகாணத்தில் பொம்மை ஆட்சி வேண்டுமா? அல்லது அதிகாரங்களுடன் கூடிய நல்லாட்சி வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அங்கு ஆளுநர் மேலாதிக்கச் சக்தியை பிரயோகிக்கும் பொழுது முதலமைச்சரால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஏறாவூரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் மேலும் கூறியதாவது;,
ஏறாவூரில் இந்தத் தேர்தல் மேடையில் பேசும் பொழுது கடந்த சில நாட்களாக நிலவிய சலனம், சஞ்சலம் என்பனவற்றுக்கு மத்தியில் கட்சியின் தலைமை என்ன சொல்லப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் காங்கிரஸ் அபிமானிகளின் முகங்களில் பிரதிபலிப்பதை என்னால் உணர முடிகிறது.
நன்கு பழுத்துக் கனிந்த பழமாக கட்சியின் வெற்றி திரண்டு வரும் நிலையில் மரத்தைக் குலுக்கி பழத்தை விழ வைக்கும் அல்லது அந்தப் பழத்தைப் குத்திக்குதறி அழுக வைக்கும் சம்பவங்கள் எதையும் கட்சிப் போராளிகள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பது நிதர்சனமாகத் தெரிகின்றது.
இன்று காலை எனது அழைப்பையேற்று தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எனது வீட்டிற்கு வந்து என்னுடன் கலந்துரையாடிய போது மேடைகளில் கட்சிக்காக உரையாற்றுவதாகக் கூறியிருக்கிறார்.
கட்சியின் வெற்றிப் பாதையை நோக்கிய  திக்குத் திசைகள் பற்றியும் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும் நாம் நிதானமாக சிந்தித்து மிகவும் சாதூரியமாக கையாள வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.
இந்தக் கட்சியின் வெற்றியைத் தட்டிப் பறித்து விடலாம், கொச்சைப்படுத்தி விடலாம் என்றவாறு தடியெடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரராகியிருக்கிறார்கள்.
தலைவர் முதல் அடிமட்டத் தொண்டர் வரை பக்குவம் இல்லாமல் இந்த இயக்கத்தை கையாளுகின்றோமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பலவிதமான சவால்களையும் கண்டங்களையும் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு முன்னரும் தேர்தல்களின் போது பல சவால்களையும் நெருக்கடிகளையும்  சந்தித்திருக்கிறோம். மக்கள் வாஞ்சையோடு கட்சியை அரவணைக்க முன்வந்துள்ளனர்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் அதிரடி முடிவெடுத்து தலைமையும் தவிசாளரும் செயலாளர் நாயகமும் களமிறங்கிய வியூகம் அனைவரும் அறிந்ததே. பாதுகாப்புக் கெடுபிடிகள் அப்பொழுது மிகவும கடுமையாக இருந்தன.
இப்பொழுதும் இயல்பு நிலை அங்கும் இங்குமாக பாதிக்கப்பட்டுள்ளது. அக்கறைப்பற்றில் ஓரளவு அட்டகாசம் தலைதூக்கியது. திருகோணமலையில் எமது சிங்கள வேட்பாளரின் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில் ராசிக் என்ற கட்சி அபிமானியின் கடை கொளுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் மிகவும் நம்பகத்தன்மையான தேர்தலாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறுபான்மைச் சமூகங்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் பங்குபற்றும் இத் தேர்தலை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றது. நேற்று ஜப்பானிய விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி என்னைச் சந்தித்த போதும் இதைக் கூறினார்.
முதலமைச்சர் பதவி பற்றிப் பேசுகிறார்கள். இங்கு ஆளுநர் மேலாதிக்கச் சக்தியை பிரயோகிக்கும் பொழுது முதலமைச்சரால் பெரிதாக எதையுமே சாதித்துவிட முடியாது. இந்த நாட்டின் பழுத்த தொழிற்சங்கவாதியும் நபிகளாரின் வம்சத்தில் தோன்றியவரென கூறப்படுபவரும் தமது கட்சிக்காக வீதியில் இறங்கி அடியும் உதையும் வாங்கியவருமான அலவி மௌலானா, கிழக்கின் ஆளுநர் போல் அதிகாரத்தைப் பிரயோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
சிறுபான்மை சமூகங்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் காணி மற்றும் கல்வி அதிகாரங்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அமைச்சரின் பொறுப்பில் விடப்பட்டுள்ளன. பதவி ஆசையில் நாம் அதிகாரத்தை புரிந்து கொண்டிருப்பதாக யாரும் கருதிவிடக் கூடாது. இது கட்சிப் போராளிகளுக்கு நன்கு தெரிந்த விஷயம். எஞ்சியுள்ள பத்து நாட்களில் வெற்றியை நோக்கிய எமது பயணத்தை குழப்பி அதில் குளிர்காய சில தீய சக்திகள் வழிபார்த்துக் கொண்டிருக்கின்றன. நாம் அவற்றுக்கு சோரம் போய்விடக் கூடாது.
வாக்களிப்பு வீதத்தைப் பொறுத்து பெறுகின்ற ஆசனங்களின் ஏற்ற, இறக்கங்கள் தங்கியுள்ளன. எமது மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
சலனங்கள் ஏற்பட்டால் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பு. கட்சியின் தலைவர் என்ற முறையில் நான் உச்சக் கட்ட பொறுமையை கையாண்டு வருகின்றேன். எனக்கு அதற்கான திறனை தருமாறு இறைவனை பிரார்த்தியுங்கள்.
எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல், சரணாகதி அரசியல் என்பவை பற்றி ஏலவே கூறியிருக்கிறேன். முஸ்லிம் காங்கிரஸூக்கும் சரணாகதி அரசியலுக்கும் வெகு தூரம். யுத்தம் முடிந்த பின்னரும் நித்திரையில்லாத இரவுகளைப் பற்றி இவ்வாறான பிரதேசங்களில் வாழும் உங்களுக்குத் தெரியும்.
நில மீட்சிக்கான ஒரு முன்னெடுப்பின் அவசியம் நன்கு உணரப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் நாம் இறங்கியிருக்கிறோம். கிழக்கில் கையாலாகாத ஒரு பொம்மையாட்சி வேண்டுமா அல்லது அதிகாரங்களுடன் கூடிய நேர்மையான நல்லாட்சி வேண்டுமா? என்பதை தீர்மானிக்க வேண்டிய தேர்தலாக இது மாறியிருக்கிறதுஎன்று குறிப்பிட்டார்.

site counter