அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 6 டிசம்பர், 2012

பாபரி மஸ்ஜித்:துயர நிகழ்விற்கு 20 ஆண்டுகள் நிறைவு


babri-masjid-demolition
இன்று பாபரி தினம். வரலாறு இருண்டுபோன கறுப்பு டிசம்பரின் இருபதாம் ஆண்டு நிறைவு. குழி தோண்டி புதைக்கப்பட்ட மதசார்பற்ற ஜனநாயக விழுமியங்களுக்கு கனலும் எதிர்ப்புகள் மூலம் எங்களது அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.
1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள் மதவெறிப்பிடித்த பயங்கரவாத கூட்டம் பாபரி மஸ்ஜிதை இடித்து தள்ளியது. அந்த புனித இறை இல்லத்தின் குவி மாடங்களில் காவி கயவர்களின் கும்பல் காலால் மிதித்த பொழுது இந்தியாவின் ஆன்மாவில் பயம் மற்றும் துவேசத்தின் வகுப்புவாத நெருப்பு பற்றி எரிந்தது. ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் அக்னி குண்டத்தில் ஒரு சமுதாயம்
உயிரோடு வீசப்பட்டது.
பாபரி மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து நிகழ்ந்த வகுப்பு கலவரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2500க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உயிர்கள் பலி வாங்கப்பட்டன.
1528-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி பேரரசர் பாபரி உத்தரவின் பேரில் அவரது ஆளுநர் மீர்பாஹி பாப்ரி மஸ்ஜிதை கட்டினார். 1936-ஆம் ஆண்டு சன்னி சென்ட்ரல் வக்ஃப் போர்டின் கீழ் மஸ்ஜித் பதிவுச் செய்யப்பட்டது. 1949-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி இரவு ஐம்பதிற்கும் மேற்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மஸ்ஜிதுக்குள் அத்துமீறி நுழைந்து மிஹ்ராபில் ராமனின் சிலையை வைத்ததைத் தொடர்ந்து இரத்தக்களரி மிகுந்த வரலாறு துவங்கியது.
1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி சோமநாத்தில் இருந்து அயோத்தியை நோக்கி அத்வானி நடத்திய ரதயாத்திரை ரத்த யாத்திரையாக மாறியது. யாருடைய உதவிகளும் கிடைக்காத அப்பாவி முஸ்லிம்களின் நெஞ்சை பிளந்துகொண்டு அத்வானியின் ரதம் உருண்டது.
1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி ஏற்கனவே தீட்டிய சதித்திட்டத்தின் அடிப்படையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் பாபரி மஸ்ஜிதை தகர்த்தனர். கரசேவகர்கள் என்ற காவி கபோதிகளின் கும்பல் மஸ்ஜிதை இடித்து தள்ளும்போது தடுக்க முனையாமல் மாநில போலீசும், மத்திய ராணுவ படையினரும் பார்வையாளர்களாக நின்றனர். பிரதமர் நரசிம்மராவ் மெளன விரதம் மேற்கொண்டார். சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து 1992 டிசம்பர் ஏழாம் நாள், பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் என்று நரசிம்மராவ் தேசத்திற்கு வாக்குறுதியளித்தார். இருபது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இதுவரை மஸ்ஜித் கட்டப்படவில்லை.
பாபரி மஸ்ஜித் நிலைப் பெற்றிருந்த இடத்தின் உரிமையியல் வழக்கில் பல தசாப்தங்கள் கழிந்த பிறகும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. 2010 செப்டம்பர் 30-ஆம் தேதி அலகபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை அளித்த விசித்திரமான தீர்ப்பு 3 தரப்பினருக்கு மஸ்ஜித் இருந்த இடத்தை பாகப் பிரிவினைச்செய்தது. அதனை எதிர்த்து அளிக்கப்பட்ட மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.
(தூதுஒன்லைன்)

முட்டை அவிக்க இனிமேல் அடுப்பு வேண்டாம்..! (படம் இணைப்பு)




நெருப்பு இல்லாமல், ரசாயனங்களின் உதவியுடன் முட்டையை இரண்டே நிமிடத்தில் வேகவைக்கும் பேப்பர் கூடு கருவியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஈஸியாக முட்டை வேக வைக்கும் வழிமுறை குறித்து எவ்கனி மார்கலேவ் தலைமையில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சி செய்தனர். பொதுவாக, காகித கூழால் தயாரான கூடுகளில்தான் முட்டைகள் வைக்கப்படும். அதுபோன்ற பேப்பர் கூட்டைக் கொண்டு இந்த கருவியை உருவாக்கியுள்ளனர். இதற்குள் மொத்தம் 3 லேயர்கள். ஒன்றில் கால்சியம் ஹைட்ராக்சைடு உள்ளிட்ட ரசாயன கலவை. இன்னொரு லேயரில் மெல்லிய படலமாக தண்ணீர். இரண்டையும் பிரிக்கிற வகையில் ஒரு கார்ட்போர்டு லேயர். 

இந்த கருவிக்கு ‘கோகோல் மோகோல்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ரஷ்யாவில் முட்டையை வைத்து தயாரிக்கப்படும் ஒரு உணவு ஐட்டத்தின் பெயர். பேப்பர் கப் போல இருக்கும் கோகோல் மோகோல் கருவிக்குள் முட்டையை வைத்து மூடிவிட்டு, வெளியே நூல் போல தொங்கும் இழையை இழுத்தால், உள்ளே இருக்கும் கார்ட்போர்டு லேயர் நகரும். தனித்தனி லேயரில் இருக்கும் ரசாயனத்துடன் தண்ணீர் சேர்ந்து சூடாகும். இரண்டே நிமிடம்தான்.. முட்டை வெந்துவிடும். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் டீ, காபி, சாஸ், சுண்டல் வகை உணவுகளை சூடாக்கி சாப்பிடும் வகையில் டின்களில் இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. 

உலோக டின்னை சூடாக்கும் தொழில்நுட்பத்தை முட்டை வேகவைக்க பயன்படுத்துவது புதிய முயற்சி என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். முக்கியமான விஷயம்.. ‘கோகோல் மோகோல்’ பேப்பர் கூடு யூஸ் அண்ட் த்ரோ ரகம். ஒரு முட்டையை வேகவைப்பதோடு ரசாயனம் காலியாகிவிடும். அடுத்த முட்டைக்கு அடுத்த கூட்டைத்தான் எடுக்க வேண்டும். சிறந்த கையடக்க கருவிக்கான டிசைனிங் விருதை ஐரோப்பிய பேக்கேஜிங் டிசைன் சங்கத்திடம் இருந்து பெற்றிருக்கிறது ‘கோகோல் மோகோல்’. இதை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்து விற்க கம்பெனிகள் எதுவும் இதுவரை ரஷ்ய விஞ்ஞானிகளை அணுகவில்லை என்பதால் விலையும் நிர்ணயிக்கப்படவில்லை.

சவூதி அரேபியாவை விமர்சிக்கலாம், புனிதத்துவமிக்க ஷரீஆ சட்டத்தை விமர்சிக்கமுடியாது


பாராளுமன்றத்தில் ஷரீஆ சட்டம் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்த கருத்துக்களானது ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்கள் அல்லவென அக்கட்சியைச் சேர்ந்த கபீர் ஹாசீம் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை, 5 ஆம் திகதி உரையாற்றியுள்ள அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது,

ஷரீஆ சட்டம் தொடர்பிலன் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்த கருத்துக்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஷரீஆ சட்டம் புனிதத்துவம் மிக்கது. அதனை விமர்சிக்கமுடியாது. அச்சட்டம் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்த கருத்துக்கள் அவரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. சவூதி அரேபியாவை விமர்சிக்கலாம், ஆனால் ஷரீஆ சட்டத்தை விமர்சிக்கமுடியாது எனவம் கபீர் ஹாசிம் எம்.பி. பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு


கல்முனை மின்பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட சகல பிரதேசங்களிலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மின் விநியோகம் தடைப்படும் என கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் M.R.பர்ஹான் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாளை காலை 8 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை மூன்று நாட்களுக்கு மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அவர் கூறியுள்ளார்.
அம்பாறை உப மின் நிலைய கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த வேலை காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட கல்முனை, மருதமுனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, சம்மாந்துறை, நற்பிட்டிமுனை, சவளக்கடை, வளத்தாப்பிட்டி, நிந்தவூர், காரைத்தீவு, சாய்ந்தமருது, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோயில், பொத்துவில், பாணம் ஆகிய பிரதேசங்களிலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மின்விநியோகம் தடைப்படும் என அக்கரைப்பற்று பிராந்திய மின் பொறியியலாளர் நூறுல் ஹக் தெரிவித்துள்ளார்.
இந்த மின்வெட்டு நாளை காலை 8 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் இருந்து வரும் அதி வலு கொண்ட மின் மார்க்கங்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகளே இந்த மின் விநியோகத் தடைக்கான காரணம் என அவர் கூறியுள்ளார்.

கல்வி கற்பதை தடுப்பவர்களுக்கு எதிராக ஜிஹாத் செய்யுங்கள் - கலாநிதி அனீஸ்


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

ஒரு சமூகம் தனது எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறது என்றால் அதனுடைய நிகழ்காலம் சரியில்லை என்பதுதான் அர்த்தம் என கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர் கலாநிதி எம் .எஸ்.அனீஸ் இலங்கை முஸ்லிம்களுடைய கல்வியின் எதிர்காலம் ஒளியிலா அல்லது இருளிலா என்ற தலைப்பில் பிரதான உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.

கல்வி முன்னேற்ற சங்கம் ஏற்பாடு செய்திருந்த  க.பொ.த. சாதாரணதரத்தில் ஒன்பது ஏ சித்திகளை பெற்ற முஸ்லிம் மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வி முன்னேற்ற சங்க தலைவர் எம்.இஸட் அஹம்மட் முனவ்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடளாவிய ரீதியில் 9 ஏ சித்திகளைப் பெற்ற 143 பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,

அரசியலில், பொருளாதாரத்தில் கல்வியில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நமக்குள்ளேயே தொடர்ச்சியாக நாம் கேள்விகளை கேட்டுக்கொண்டு இருக்கிறோம். அதன் அர்த்தம் நிகழ்கால நிகழ்வுகள் எமக்கு திருப்தியளிப்பதாக இல்லை. இதைப்பற்றி நாம் அச்சம் அடைகின்றோம். 

கடந்த வருடம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 9 பாடங்களில் ஏ தர சித்திகளை பெற்றிருக்கிறார்கள். இதில் 143 மாணவ, மாணவிகள் முஸ்லிம்கள். முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்தை எடுத்துக்கொண்டால் இன்று 9.7 வீதமாகும். கிட்டத்தட்ட 10 வீதம் என்று வைத்தால் 3000 மாணவர்களில் எமது விகிதாசாரப்படி 300 மாணவர்கள் ஏ தர சித்தி பெற்றிருக்க வேண்டும். 

எமது விகிதாரசாரத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் 300 மாணவர்கள் ஏ தர சித்தி பெற்றிருக்க வேண்டுமல்லவா. இந்த  அடைவு மட்டங்களை எண்ணி நாம் மகிழ்சியடைவதற்கு ஒன்றுமேயில்லை.

நாம் பெற்றுக்கொண்ட இந்த அடைவு மட்டத்திலும் 143 மாணவர்களில் ஏறத்தாள 30 மாணவர்கள் ஆண்களாகும். 113 பேர் பெண்கள். இதன் அர்த்தம்தான் என்ன? ஒருவிதத்தில் நாம் சந்தோசமடையலாம் பெண்களின் கல்வித்தரம்  உயர்ந்த கொண்டிருக்கிறது என்று. இவ்வாறான நிலைதான் இன்று பல்கலைக்கழகங்களிலும் காணப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இருக்கின்ற முஸ்லிம் மாணவ மாணவிகளில் 80 வீதம் பெண்கள் 20 வீதமே  ஆண்கள். ஒரு வகையில் சந்தேசப்பட்டாலும் மறுபுறத்தில் முஸ்லிம் சமூகம் கல்விக்கு வழங்குகின்ற முன்னுரிமை என்பதன் அடிப்படையில் பார்க்கின்றபோது மிகவும் வேதனைக்குரிய விடயமேயாகும்.

மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்காக நடாத்தப்படுகின்ற இறுதிப் பரீட்சையும் அந்த மாணவர்களுக்கான கடைசி வகுப்பும் நடைபெற்றபோது. அனைவரையும் எனது நாளைய கடைசி வகுப்புக்கு கட்டாயம் சமூகமளிக்க வேண்டும் என்று அனைத்த மாணவ, மாணவிகளையும் கேட்டுக் கொண்டேன். இந்த வகுப்பில் மாணவர்கள் எவ்வாறு பரீட்சைக்கு தயாராக வேண்டும் என்னென்ன விடயங்களை படிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கின்ற வகுப்பு. எனது இறுவகுப்பில் இரண்டு மாணவிகள் சமூகமளிக்கவில்லை கடைசி வகுப்பின்போது நான் எல்லோரிடமும் கேட்டேன் எல்லொரும் சமூகமளித்திருக்கிறீர்களா என்று மாணவர்கள் மத்தியில் மௌனம்.  ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள் உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்டபோது. சமூகமளிக்காத இரு மாணவிகளுக்கும் அடுத்த வராம் திருமணமாம் இனி அவர்கள் பல்கலைக்கழகம் வரமாட்டார்கள் என்று  என்று சொன்னார்கள்.

எனக்கு தெரிந்தவரையில் அந்த இரண்டு பிள்ளைகளும் மிகவும் கெட்டிக்கார பிள்ளைகள். இந்த நிலைதான் இன்று முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த இருவரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அரசாங்கம் இவர்களுக்காக மூன்றரை, நான்கு இலட்சம் ரூபா பணத்தை செலவிடுகின்றது. அத்துடன் இவர்களும் செல்லாமல் பல்கலைக்கழக அனுமதிக்காக காத்தருந்த இருவரின் சந்தர்ப்பத்தையும் இல்லாமல் செய்தவர்கள். எனவே இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இன்று எமது பல்கலைக்கழகங்களில் 20 ஆயிரம் பேருக்குத்தான் அனுமதி வழங்கப்படுகின்றது. சித்தியடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளில் இருந்து தனக்கு பல்கலைக்கழகம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

அவர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தூக்கி எறிந்துவிட்டு ஏனைய இருவரது சந்தர்ப்பங்களையும் இல்லாமல் செய்து விட்டார்கள். எனவேதான் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று நான் கூறுகிறேன். 

பாடசாலை இடைவிலகல் என்றுதான் நாம் கேள்விப்பட்ருக்கிறோம் ஆனால் இன்று இடைவிலகள் பல்கலைக்கழகங்களிலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதிலும் முஸ்லிமகள்தான் மிகமிக அதிகமாகும். மிகவும் வெட்கப்பட, வேதனைப்பட வேண்டிய விடயமாகும்.

தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம்கள் மிகமோசமான ஒரு நிலைக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இன்று எந்தவொரு முஸ்லிம் நாடும் நிம்மதியாக இருப்பபதாக தெரியவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கின்ற அத்தனை சக்திகளும் ஒன்று திரண்டு இந்த முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எமது நாட்டிலும் அவ்வாறான ஒரு சூழ்நிலை இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது. நன்றாக சிந்திக்க வேண்டிய காலமாக இருக்கின்றது. தொடர்ச்சியாக பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களே முஸ்லிம்களின் பள்ளிகளை உடைக்கின்ற வேதனைக்குரிய நிலைமை உருவாகியிருக்கிறது. அறியாமையினுடைய வெளிப்பாடுகளை இன்று நாம் பள்ளியில் பார்க்கின்றோம்.

இந்த நிலையிலேயே நாம் எமது கல்வியை பார்க்க வேண்டியிருக்கின்றது. கல்வியுடைய சமூகம் என்றால் அது எப்படியிருக்க வேண்டும் என்று எத்தனையோ பேர் சொல்லியும் கேட்டும் தெரிந்து வைத்திருகிறோம். 

நடந்த ஓரு சின்ன உதாரணத்தை சொல்ல வேண்டியிருக்கின்றது. எனது மகள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியிருக்கிறாள் நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் ஒருவர் வந்து கேட்டார். சந்தோசப்பட வேண்டிய விடயம். உங்களுடைய மகளை நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவிடடு அல்லவா வந்து கேட்கவேண்டும்.

இல்லை எனது மகளுக்கு திருமணம் செய்து கொடுக்கப்போகிறேன் உங்களுடைய அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறார். சந்தோசப்படவேண்டிய விடயம். அவளை பல்கலைக்கழகம் அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

ஒன்றரை வருடம் கழிந்த பிறகு அதே நபர் என்னிடம் வந்து கேட்கிறார் உங்களுக்கு தெரிந்த முஸ்லிம் பெண் வைத்தியர் இருக்கின்றாரா என மகள் கர்ப்பமாக இருக்கிறார் அவருக்கு வைத்தியம் பார்க்கவேண்டும் என்று.  ஒரு முஸ்லிம் பெண் மருத்துவத்திற்கு தகுதிபெற்றவர். இன்று அவருக்கு மருத்துவம் பார்க்க இன்னுமொரு பெண் வைத்தியரை தேடுகின்றார் அவரது பெற்றோர். ஒரு வைத்தியரை தொலைத்த விட்டு இன்னொரு முஸ்லிம் பெண் வைத்தியரை தேடுகின்றார் என்றால் நாம் கல்வியில் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றோம். சிந்தித்துப் பார்க்க வேணடிய விடயம். 

உனது மகள் வைத்தியராகக் கூடிய சந்தர்ப்பத்தை நீ விட்டுவிட்டு இன்னொர முஸ்லிம் பெண் வைத்தியரை எப்படி தேடுவது. அவர்களுடைய பெற்றோரும் உன்னைப் போல் ஒருவர் தானே. ஆவர்கள் எவ்வாறு பல்கலைக்கழகம் அனுப்பினார்கள் சிந்திக்க வேண்டும். நீ மருத்துவத்துவத்துறைக்கு செல்ல விருப்பம் இல்லையென்றால் நீ எவ்வாறு முஸ்லிம் பெண் வைத்தியரை தேடுவது. என்னுடைய மகள் பல்கலைக்கழகம் போனால் கெட்டுவிடுவால் பல்கலைக்கழக சூழ்நிலை சரியில்லை. இதுதான் எமது சமூகத்தின் பெரும்பான்மையானோரின் எண்ணமாகும்.

குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு ஒன்றைச் சொல்கிறேன் நீங்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டு அதனை உங்கள் பெற்றோர் தடுத்தால் நீங்கள் ஜிகாத் செய்யுங்கள். இதுதான் நாங்கள் செய்ய வேண்டிய ஜிகாத்தாகும். இன்று அதனை எமது முஸ்லிம்களுக்குள்ளேயே செய்ய வேண்டியுள்ளது.

அறிவுமைய, தகவல்மைய சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அதனது உடலுக்குள் ஒரு பொருளை செலுத்தி அந்த மனிதன் நூறு வருடங்கள் வாழ்ந்தாலும் அதனை பதிவு செய்து அறியக்கூடிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

உமையாக்கள், அப்பாசிகள் என்றும் முஸ்லிம்கள் அந்தக் காலத்திலேயே வரலாறு படைத்தார்கள் என்று நாம் பெருமை  பேசிக்கொண்டிருக்கின்றோம். எந்தனை நூற்றாண்டுகளுக்கு பின்னால் இருந்துகொண்டிருக்கின்றோம்.

இந்த நூற்றாண்டில் எமக்கு சொல்லக்கூடிய தலைவர்களோ, விஞ்ஞானிகளோ யாரும் இல்லை. 500, 600 அண்டுகளுக்கு பின்னால் இருந்து கொண்டிருக்கிறநோம் இந்த நாட்டிலே நல்லிணக்கமும் நிரந்தர சமாதானமும் உருவாக வேண்டுமாக இருந்தால் எங்களுடைய பங்களிப்பும் அதற்கு தேவை. அந்த பங்களிப்புக்கு நாங்கள் ஒரு சிறந்த அறிவு மயப்படுத்தப்பட்ட சமூகமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிலிப்பைன்ஸில் சூறாவளி கோரத் தாண்டவம்; 280 பேர் பலி; லட்சக் கணக்கானோர் பாதிப்பு!



பிலிப்பைன்ஸில் வீசுகின்ற கடுமையான சூறாவளியால் சுமார் 280 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
‘போபா’ எனப் பெயரிடப்பட்ட இந்த சூறாவளி பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியான மின்டானோ பகுதியை தாக்கியபோது, கொம்பொஸ்ரலா பள்ளத்தாக்கு மாகாணத்தில் மாத்திரம் குறைந்தது 156 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மீட்புப் பணியாளர்கள் அந்தப் பகுதிகளைச் சென்றடைந்துள்ளனர். ஆயினும் தனியான இடங்களில் வாழ்கின்ற சமுதாயத்தினரை எட்டுவதில் கஷ்டங்கள் உள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த சூறாவளி தென் சீனாவின் கடலுக்கு வியாழக்கிழமை நகர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளை, அதிகாரிகளே திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்கின்றனர்; பாராளுமன்றில் ஹசனலி காட்டம்!


-எஸ்.எல்.முனாஸ்-
2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் 3வது வாசிப்பின் போது விசேட தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட சில அமைச்சுக்களின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி ஆற்றிய உரையே இது.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் 3வது வாசிப்பின்போது விசேட தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட சில அமைச்சுக்களின் விவாதத்தில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கியதற்காக உங்களுக்கு நன்றி கூறிக் கொண்டு எனது உரையைத் தொடங்குகின்றேன்.
காணி, காணி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சுக்கள் சம்பந்தமான விடயங்களில் எனது ஆலோசனைகள் சிலவற்றை முன்வைத்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன்.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற கௌரவ அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கூன் அவர்கள் சென்ற 2011ம் வருடம் ஜூலை மாதம் பொத்துவில் பிரசேத சபைக்கு வருகை தந்து அப்பிரதேசங்களில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த காணிப் பிரச்சினைகளை ஆராய்ந்ததுடன் அவரைச் சந்தித்த விவசாயிகளுக்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் ஊட்டிச் சென்றார்.
தனது அமைச்சின் உயர் அதிகாரிகள் பலருடன் வருகை தந்த அவர் சமூகமளித்திருந்த விவசாயிகளின் பிரச்சினைகளை மிகவும் கரிசனையுடன் செவிமடுத்து ஆறுமாத காலத்துக்குள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துத் தருவதாக வாக்குறுதிகளையும் வழங்கினார். அதற்காக அவருக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.
40 வருடங்களுக்குப் பின்னர் அந்தப் பிரதேசத்துக்கு வருகை தந்த முதலாவது காணி அமைச்சர் அவர் என்பதை மிகவும் சந்தோஷத்துடன் நான் இந்த சபையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இன்று அவரின் பரிவாரங்கள் வருகைதந்து சென்று சுமார் 1½ வருடங்கள் கடந்து விட்ட போதிலும் சொல்லப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தற்போது மனம் உடைந்து போய் உள்ளனர். இதற்காக நான் இந்த சபையில் அமைச்சரைக் குறைகூற விழையவில்லை.
கடந்த 1½ வருடகாலத்தில் அமைச்சரவர்களை இவ்விடயமாக நான்; அவ்வப்போது விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்த போதெல்லாம் அவர் இதயசுத்தியுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி எடுப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது.
துரதிர்ஷ்டவசமாக சில அரச அதிகாரிகள் கக்சேரி மட்டத்திலும் திணைக்கள மட்டத்திலும் பிழையான தகவல்களை வழங்கி அமைச்சரின் முயற்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றனர். இதனால் அரசுக்கும் அமைச்சுக்கும் விவசாயிகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டு வருவதனை நான் மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இரண்டு மூன்று தசாப்தங்களாக விவசாயிகள் கைவசம் வைத்திருக்கும் காணி உரிமைப் பத்திரங்களைக் கூட சில அதிகாரிகள் செல்லுபடியற்றது என்று எடுத்த எடுப்பில் நிராகரிக்கின்றனர். ஆனால் அதேபோன்ற அனுமதிப்பத்திரங்களை தம்வசம் வைத்திருக்கும் ஏனைய பல விவசாயிகள் வேறு கண்டங்களில் எவ்வித தடங்கலுமின்றி தங்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன ரீதியாகவும் பிரதேசரீ தியாகவும் காணிகளின் அனுமதிப்பத்திரங்கள் எமது மாவட்டத்தில் சில பகுதிகளில் வகைப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படுவதாக முஸ்லிம் விவசாயிகள் எம்மிடம் முறையிடுகின்றனர்.
கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக குறிப்பிட்ட காணிகளில் விவசாயத்தில்; ஈடுபட்டு வரும் முஸ்லிம் மக்கள் மேற்படி காணிகளுக்கு வங்கிக்கடன், நீர்வரி மற்றும் உரமானியங்களை உத்தியோக பூர்வமாக பெற்றுக் கொள்வதற்காக அங்கீகரிக்கப்பட்டு வந்த உரிமைப் பத்திரங்கள் கூட தற்போது நிராகரிக்கப்பட்டு தங்கள் வயல்களிலிருந்து விரட்டப்படுகின்றனர்.
2006ம் ஆண்டு பொத்துவில் பிரதேசங்களில் மாகாண சபையால் நடத்தப்பட்ட காணிக் கச்சேரியின் போது பரிசீலிக்கப்பட்டு வழங்கப்பட்ட உரிமைப் பத்திரங்கள் கூட தற்போது எதேச்சாதிகாரமாக நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு தலைப்பட்சமாக சில அதிகாரிகளால் எடுக்கப்படும் முடிவுகள் அப்பாவி விவசாயிகள் மீது திணிக்கப்படுகின்றன.
உண்மை நிலையை வெளிப்படைத்தன்மையுடன் விளக்கிக் கூறுவதற்கு அதிகாரிகள் இடமளிப்பதில்லை என்ற ஒரு குறைபாடு தொடர்ந்து வருவதனை கௌரவ அமைச்சர் கவனிக்க வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் யுத்த காலத்தின் போது நிலவிய அசாதாரண நிலைமைகளினால் பாதிக்கப்பட்டு பல விதமான நிர்வாகச் சிக்கல்களுக்குள் சிக்கித் தவித்த முஸ்லிம் தமிழ் விவசாயிகளின் காணி உடைமை விவகாரங்களில் உதவுவதற்காக ஒரு விசேட கருமபீடம் உடனடியாக அமைக்கப்பட்டு அவர்களின் குறைகள் களையப்பட வேண்டும்.
பொத்துவிலில் கரங்கோவா பிரதேசத்தில் 502 ஏக்கர் காணி சம்பந்தமான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. 2008ம் ஆண்டிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயம் சம்பந்தமாக அரசாங்கத்துடனும் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்களிலும் முறையிட்டு வந்துள்ளது.
மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்து அமைவாக உயர் மட்ட குழு காணிகளை பார்வையிட்ட பின்னர் அங்கு விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு தீர்மானமும் எடுத்திருந்தது. ஆனாலும் அந்த தீர்மானம் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த 40 வருடங்களாக பலர் இங்கு தொடர்ச்சியாக தமது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ள போதிலும் அவர்கள் வசம் உள்ள உரிமைப் பத்திர ஆவணங்கள் பிழையானவை என்று சொல்லி தற்போது காணிகளில் இருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
வட்டமடு, ஆமவட்டுவான், வேகாமம், கடியான்பள்ளம் பகுதிகளில் சுமார் 5000ஏக்கர் காணிகளின் பிரச்சினைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. வட்ட மடுப் பிரதேசத்தில் உள்ள 3850 ஏக்கர் காணியை மேய்ச்சல் நிலமாக மாற்றுவதக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது உத்தரவு பத்திரம் உள்ள முஸ்லிம் விவசாயிகளின் சொந்த நிலங்களையும் அபகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காணிச் சொந்தக்காரர்கள் எங்களிடம் முறையிட்டு வருகின்றனர்.
1943ம் வருடங்களில் உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் மத்திய வகுப்பாருக்கு 10 ஏக்கரும் 4 ஏக்கருமாக பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளும் கூட 2006ம் ஆண்டில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வனபரிபாலன இலாகாவுக்காக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பறித்தெடுக்கப்பட்;டுள்ளன.
இக்காணிகளை மீட்டெடுப்பதற்காக விவசாயிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்புகள் காணி சொந்தக் காரர்களுக்கு ஒரளவு சாதகமாக இருந்துள்ளதால் தீர்ப்பை நடைமுறை படுத்துவதற்கு சிலர் தயக்கம் காட்டுகின்றனர். இதனையும் அமைச்சர் அவர்கள் கவனத்தில் கொண்டு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
சம்மாந்துறை கறங்காவட்டையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 380 ஏக்கர் நெல் வயல்கள் யானைப் பாதுகாப்பு வலயத்துக்குள் சேர்த்துக் கொள்ளப்படாது திட்டமிட்டு ஒதுக்கப்பட்டுள்ளதனால் அக்காணிகளை விவசாயிகள் கடந்த பல வருடங்களாக உரிய முறையில் பயன்படுத்த முடியாது தவிக்கின்றனர். இது பற்றி சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்டும் எதுவும் நடைபெறுவதாக வில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டகின்றனர்.
முற்றிலும் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான இக்காணிகளில் தற்போது வெளியார்கள் அத்துமீறி பிரவேசித்து பலாத்காரமாக விவசாயம் செய்தும் வருகின்றார்கள்.
சம்மாந்துறைக்கும் அம்பாறைக்கும் பொதுவாக காலா காலமாக இருந்த வந்த எல்லைகள் புதிதாக அளவை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த புதிய எல்லையை காட்டுவதற்காக சம்மாந்துறை பிரதேச செயலாளரை தங்களிடம் வருமாறு நில அளவையாளர் திணைக்களம் சென்ற மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
புதிதாக வகுக்கப்பட்டுள்ள எல்லையின் படி சம்மாந்துறை பிரதேசம் சுமார் 550 ஏக்கர் காணிகளை இழக்க வேண்டியுள்ளதாக பொது மக்களும் சிவில் சமூகமும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
1939ம் ஆண்டு காணிக் கச்சேரி வைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட இக்காணிகள் பற்றி வரைபடம் ஆவணங்கள் அனைத்தும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரும்போது எவ்வாறு தன்னிச்சையாக சில அதிகாரிகள் செயல்பட்டு புதிய எல்லைகளை வகுத்து முரண்பாடுகளை தோற்றுவிக்க முடியும்.
வளத்தாப்பிட்டி நீர்த்தேக்கத்துக்கும் புதிய எல்லைகள் தற்போது ஒருதலைப்பட்சமாக வகுக்கப்பட்டுள்ளன. 1976ம் ஆண்டிலிருந்து 120 குடும்பங்களுக்கு சொந்தமான 300 ஏக்கர் காணிகள் இதனால் பறிபோகக்கூடிய அபாயம் அப்பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சில திணைக்களங்கள் பொதுமக்களையும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையும் உள்ளுர் அரச நிர்வாகங்களையும் கலந்தாலோசி;க்காது தன்னிச்சையாக மேற்கூறப்பட்ட முடிவுகளை எடுத்திருப்பது வேதனை தருகின்றது.
நம் நாட்டில் இனங்களுக்கு இடையில் புரையோடிப்போயுள்ள முரண்பாடுகளை களைந்து ஒரு புதிய ஆரோக்கியமான ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதற்காக நாம் எல்லோரும் பாடுபடுவது உண்மையானால் இவ்வாறான தன்னிச்சையான தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
அரசாங்கத்திலுள்ள உயர்மட்ட அமைச்சர்களுக்குத் தெரியாமல் ஒழுங்கான முறையில் ஆலோசனைகள் பெறப்படாமல் கட்டவிழ்த்தப்படும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கா விட்டால் சிறுபான்மைச் சமூகங்களின் உள்ளங்களை ஆட்கொண்டுள்ள சந்தேகத்தை களைவது கடினமாகும் என நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
சீனிக் கூட்டுத்தாபனத்துக்கு 1965ம் ஆண்டில் தமது காணிகளைப் பறிகொடுத்த முஸ்லிம் விவசாயிகள் நீண்ட காலமாக நிர்வாக ரீதியாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு முடியாமல் ஈற்றில் நீதிமன்றத்துக்குச் சென்று பரிகாரம் பெற்றும் கூட அவர்களின் காணிகளை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் மாவட்ட மட்டத்திலுள்ள நிர்வாகங்கள் மேற்கொள்ளவில்லை.
சுமார் 985 ஏக்கர் காணிகளை இவ்வாறான புறக்கணிப்பால் விவசாயிகள் அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றனர். 1965ம் ஆண்டு இக்காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகளை தருவதாகக் கூறி விவசாயிகளிடம் இருந்த மூலப்பிரதி ஆவணங்களை கபடத்தனமாக பெற்றுக் கொண்ட அன்றைய கச்சேரி நிர்வாகம் பின்னர் அவற்றைத் திருப்பித் தராமல் ஏமாற்றிய விடயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் பரவலாக நினைவு கூரப்பட்டு வரும் மறக்கமுடியாத உண்மையாகும்.
அன்றிலிருந்து இன்றுவரை காணி சொந்தக் காரர்களுக்கும் அரச நிர்வாகத்தினருக்கும் இடையிலே தொடர்ந்து வரும் இழுபறி நிலமைக்கு சுமுகமான தீர்வை பெறுவதற்காக பலமுறை நான் அரச வளங்கள் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் கூட்டங்களில் பிரஸ்தாபித்திருந்தேன்.
இவ்வாறு பறிக்கப்பட்ட காணிகளின் சொந்தக்காரர்களுக்கான பரிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஒரு விசேட குழுவை அமைக்குமாறு அம்பாறை கச்சேரிக்கு கௌரவ அமைச்சர் தயசிறித்த திஸ்சேரவினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் கூட இன்னும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. முன்பிருந்த அரசாங்க அதிபரும் கூட இவ்வாறே இந்த விடயத்தில் ஒத்துழையாமல் நடந்து கொண்டதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி வில்லி கமகே அவர்கள் கடைசியாக நடந்த பாராளுமன்ற ஆலோசனை சபை குழுக் கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்துக் கொண்டார்.
அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டத்தில் அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் அங்கலாய்த்துக் கொள்ளும் அளவிற்கு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விவகாரங்கள் கையாளப்படும் விதம் வேதனையைத் தருகின்றது.
2008ம் ஆண்டிலிருந்து இக்குழுவை அமைக்கும் பணி புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூட்டக் குறிப்புகளில் இருந்து எம்மால் அறிய முடிகின்றது.
பொத்துவில் தாறாம் பள்ளக் கண்டத்திலுள்ள சுமார் 500 விவசாயிகளும் வேகாமத்தைச் சேர்ந்த 251 விவசாயிளும்;, கிரான் கோமாரியைச் சேர்ந்த 173 விவசாயிகளும் புதுக்கண்டத்தைச் சேர்ந்த 385 விவசாயிகளும் சம்மாந்துறை மஜீது புரத்தைச் சேர்ந்த 428 விவசாயிகளும் உரிய முறையில் காணிக் கச்சேரிகளுக்கு முறைப்பாடுகளைக் கொடுத்திருந்தும் இதுவரை அவர்களது பிரச்சினைகள் முற்றாகத் தீர்க்கப்படவில்லை.
மேற்கூறப்பட்ட காணிகள் சம்பந்தமான பிரச்சினைகள் காணி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் என்னால் பிரஸ்தாபிக்கப்பட்ட போதெல்லாம் அம்பாறை கச்சேரி மட்டத்தில் ஒரு குழுவை அமைத்து உடனடி நிவாரணத்தை வழங்குமாறு அம்பாறை அரச அதிபருக்கு பாராளுமன்ற ஆலோசனை சபை பணிப்புரைகளை வழங்கியும் கூட அந்தக்குழு ஒரு வருடம் கடந்தநிலையிலும் இதுவரையிலும் அமைக்கப்படவில்லை என்பதை மனவருத்தத்துடன் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விக்கிழா மடுக்கண்டம், கள்ளியம்பத்தை, தொட்டம் வைரத்தடி, முன்மாரி, நீத்தை, பாணகமுவ, நுரைச்சோலை, இலுக்குச்சேனை, வெள்ளக்கல் தோட்டம் போன்ற பிரதேசங்களில் நீண்ட காலமாக தொடர்ந்து வரும் பிரச்சினைகள் இனிமேலும் தாமதியாது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.
பொதுவாக சொல்வதானால், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது காணிப் பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்வதற்கான பொறிமுறைகள் ஒழுங்காக செயல்படுவதில்லை என்பது பெரும் குறையாக இருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காணி நிருவாகத்திணைக்களத்தில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய ஒரு உதவிக் காணி ஆணையாளரோ, அல்லது சாதாரண இலிகிதரோ கிடையாது.
தமிழ் மொழியில் கடமையாற்றக் கூடிய ஒரு காணி உத்தியோகத்தர், குடியேற்ற உத்தியோகத்தர், வெளிக்களப் போதனாசிரியர் எவரும் கடந்த 15 வருட காலத்தில் நியமனம் செய்யப்படவில்லை.
அம்பாறையிலுள்ள பிரதி காணி ஆணையாளர் காரியாலயத்தில் தமிழ் பேசக் கூடிய ஒருவரை மேலதிக பிரதி காணி ஆணையாளராக உடனடியாக நியமிக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் 6 தமிழ் பேசும் பிரதேசங்களும் 3 சிங்களம் பேசும் பிரதேசங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் பேசும் பிரதேசங்களான இறக்காமம், அக்கரைப்பற்று, ஆலையடி வேம்பு, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி விவசாயிகள் மொழி ரீதியாக தங்களது தொடர்பாடல்களை காணிஆணையாளர் காரியாலயத்துடன் மேற்கொள்வதற்கு மிகவும் கஷ்டப்படுவதாக எமக்கு முறைபாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.
நீதிமன்ற வழக்குகள் சம்பந்தமான விசாரணைகள், காணித்தகராறுகள் பற்றிய திணைக்கள மட்ட விசாரணைகள், ரன்திம கொடுப்பனவுகள் போன்ற விடயங்களில் விளக்கங்களை அளிப்பது போன்ற சந்தர்ப்பங்களின் போது மொழி தெரியாத விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுவதாகச் சொல்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் சுமார் 10 10 DOAS (Divisional Officers of Agrarian Services) பிரதேச விவசாய சேவைகள் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களின் இடத்துக்கு புதிதாக எவரும் இதுவரை சேர்த்துக் கொள்ளப்படவுமில்லை.
அண்மைக் காலங்களில் விவசாய உத்தியோகஸ்தர்கள் நியமனங்கள் சிங்கள பிரதேசங்களுக்கு மட்டுமே வழங்கப்படடுள்ளன. தமிழ் பேசும் பிரதேசங்களுக்கு இந்நியமனங்கள் இன்னும் வழங்கப்படாதது பெரும் குறையாக உள்ளது.
துறைமுக அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்ட காணிச் சொந்தக்காரர்கள் 39 பேர் நஷ்;ட ஈட்டைப் பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
துறைமுக அதிகார சபையின் விலை மதிப்பீட்டுப் பிரிவுக்கும், தேசிய மட்ட விலை மதிப்பீட்டு திணைக்களத்துக்குமிடையில் சரியான நஷ்ட ஈட்டுத் தொகையைத் தீர்மானிப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை நீடித்து வருவதனால் அப்பாவி காணி சொந்தக்காரர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்ற நவம்பர் 10ம் திகதி பாராளுமன்றத்தில் இது சம்பந்தமாக நான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுது இந்த விடயத்தில் துறைமுக அதிகார சபை போதிய ஒத்துழைப்பை வழங்க வில்லை என்று காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கூன் அவர்கள் வெளிப்படையாக தனது பதிலில் தெரிவித்திருந்தார்.
காணி அமைச்சர் இவ்விரு அரச நிர்வாகங்களுக்கிடையில் ஒரு சமரச முயற்சியில் ஈடுபட்டும் எந்தவொரு முடிவையும் எட்ட முடியாதிருக்கின்றது என கை விரித்து விட்டார்.
இழுபறிக்குள் மாட்டுப்பட்டுள்ள அனைவரும் முஸ்லிம்களாக இருப்பதால் எமக்கு அதிக அழுத்தங்கள் பல மட்டங்களிலிருந்தும் வந்தவண்ணம் உள்ளன. சம்பந்தப்பட்ட அமைச்சர் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தி தேசிய விலை மதிப்பீட்டுத் தினைக்களத்தின் ஆலோசனைப்படி நஷ்ட ஈட்டுத் தொகையினைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்யமாறு வேண்டுகிறேன்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் உள்ள விவசாய நிலங்களை பராமரிப்பதற்கு கனரக இயந்திரங்களைக் கொண்ட ஒரு தனியான பிரிவு நிர்மாணிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
எமது பகுதியிலுள்ள சிறந்த வளங்களைக் கொண்ட விசாலமான வயல் வெளிகளை உரிய முறையில் தேவையான காலங்களில் பராமரிக்க முடியாதுள்ளதால்; விவசாயிகளும் நமது நாடும் முழுமையான பலன்களை அந்த வயல் நிலங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.
உரிய காலங்களில் தேவையான பராமரிப்பு இன்றி தூர்ந்து போகும் நிலையில் பல வாய்க்கால்கள் இப்பிரதேசங்களில் உள்ளன. 60 வருடங்களாக புனருத்தாபனம் செய்யப்படாமல் உள்ள வாய்க்கால்களும் வடிச்சல்களும் எமது பிரதேசங்களில் கவனிப்பாரற்று கிடக்கின்றன.
தற்போது அம்பாறையில் உள்ள நீர்பாசன கமநல திணைக்களங்களால் கரையோரப் பகுதிகளிலுள்ள நிலங்களின் இவ்வாறான தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கின்றது.
இறுதியாக நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
2013 (தியடகிருள) தேசத்தின் மகுடம் திட்டத்தின் கீழ் எமது பிரதேசங்களில் நீண்ட காலமாக தீர்த்து வைக்கப்பட முடியாமல் இருக்கும் காணிப் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கான ஒரு பொறிமுறையை உண்டாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினைகளை பெருமனது கொண்டு எந்த விதமான இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சரியான முறையில் அணுகி தீர்த்துக் கொடுப்பதன் மூலம் ஒரு முழுமையான சமாதானத்தையும் சௌஜன்யத்தையும் கட்டியெழுப்ப முடியும்.
2013 (தியடகிருள) தேசத்தின் மகுடம் திட்டத்தில் நிந்தவூரில் நீண்ட காலமாக அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்து எம்.எச்.எம். அஷ்ஃரப் ஞாபகார்த்த வரவேற்பு மண்டபத்தின் தொடர் நிர்மாண வேலைகளை உள்ளடக்கியதற்காக மான்புமிகு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களுக்கு எனது சார்பிலும் எனது ஊர் மக்கள் சார்பிலும் கட்சி சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அமைச்சர் டக்ளஸின் துணிச்சல்; 13ஆம் திருத்தத்திற்கு ஆதரவான எம்.பி.க்களை அணி திரட்டுகிறார்!


13ஆவது திருத்தச் சட்டம் அமுலில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றக் குழு அறையில் இடம்பெறவுள்ளது.
ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மிகவும் துணிச்சலுடன் இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் ஆளும் மற்றும் எதிரணி எம்.பி.க்கள் பலர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், முஸ்லிம் எம்.பி.க்களுக்குப் புறம்பாக இடதுசாரி மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட சிங்கள எம்.பி.க்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு 13ஆவது திருத்தச் சட்டம் அமுலில் இருக்க வேண்டும் என்பதற்கான ஆதரவை வெளிப்படுத்துவர் என்று அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

site counter