நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை, தேசிய உற்பத்தித் திறன் (2010-2011) விருது பெற்றதை முன்னிட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (15) பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது.
வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் உபதலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான ஏ.நசீர் அஹ்மட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் பிரதம அதிதியாகவும் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காஸிம், ஹசன் அலி, மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
அத்துடன் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம் ஏ.எம்.தாஹிர், உப தவிசாளர் எம் எம் எம் அன்சார், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ரிபா உம்மாஹ் ஜலீல், கல்முனை பிராந்திய சுகதார சேவைப் பணிப்பாளர் எம் எஸ்.இப்ராலெப்பை மற்றும் சுகாதாரத்துறை உயர் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதன்போது தேசிய உற்பத்தி திறன் போட்டியில் இவ்வைத்தியசாலை விருது பெறுவதற்கு தலைமை தாங்கி அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பி.எம்.மாஹிர் உட்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இதற்கான வெற்றிக் கேடயத்தை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பி.எம்.மாஹிரிடம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் கையளித்தார்.
அதேவேளை இவ்வைத்தியசாலைக்கான இணையத்தளத்தையும் முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது சுமார் 20 விசேட தேவையுடையோருக்கு சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பைசால் காஸிம் எம்.பி. முதலமைச்சருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்; இவ்வைத்தியசாலையை மாகாண தள வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையினை விரைவில் நிறைவேற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
கடந்த வருடம் தேசிய ரீதியாக அரச நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு இடையிலான தேசிய உற்பத்தி திறன் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 123 வைத்தியசாலைகளுள் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை விருதுக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.