அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

கிழக்கு முதலமைச்சராகிறார் நஜீப்; அமைச்சர் பதவிகளுக்கு ஜெமீல், நஸீர் அஹமத், பிள்ளையான், திசாநாயக்க தெரிவு!


பெரும் இழுபறியில் இருந்து வந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான நஜீப் அப்துல் மஜீதை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மாநித்துளார் என அறிவிக்கப்படுகிறது.
இவரது நியமனத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிழக்கின் முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வதற்கும் முதல் இரண்டரை வருடங்களுக்கு நஜீப் அப்துல் மஜீதையும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரையும் நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மு.கா.தலைவர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அறிய வருகின்றது.
இதன் மூலம் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற பெருமையை நஜீப் அப்துல் மஜீத் பெற்றுக் கொள்கிறார்.
அதேவேளை கிழக்கின் புதிய ஆட்சி அமைப்புக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இரண்டு மாகாண அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதன் பிரகாரம் மு.கா. சார்பில் அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகிய இருவரும் இந்த அமைச்சு பதவிகளுக்கு நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை தமிழ் சமூகத்தின் சார்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சிங்கள சமூகத்தின் சார்பில் முன்னாள் மாகாண அமைச்சர் விமலவீர திசாநாயக்க ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
அத்துடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் அமீர் அலி தவிசாளர் பதவிக்கும் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை பிரதி தவிசாளர் பதவிக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் ஹக்கீமின் சூடான வார்த்தைப் பிரயோகங்கள்


By General
2012-09-18 10:19:09

மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் யார் ஆட்சியமைப்பது? யாருடன் இணைந்து ஆட்சியமைப்பது போன்ற வினாக்கள் தொடர்கின்றன.

எனினும் பெரும்பாலும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள மு.கா, த.தே.கூட்டமைப்புடனான இணைவை தவிர்த்து ஆளும் ஐ.ம.சு. கூட்டமைப்புடனேயே கிழக்கில் ஆட்சியமைக்கும் என்பது அனைவரும் அனுமானித்துள்ள விடயமாகும்.

இந்நிலையில் மு.கா. பெற்றுக்கொண்ட 07 ஆசனங்களும் அரசுக்கெதிராக பெறப்பட்டவையே! இந்நிலையில் அரசோடு மு.கா. கூட்டிணைவது எவ்வளவு தூரம் சரியானது என்பது கேள்விக்குறியே!

கிழக்கில் தனித்துப் போட்டியிட்ட மு.கா.வின் தேர்தல் பிரசார மேடைகளில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசிய பேச்சுக்கள் அரசுடனான இணைவை ஒரு முறை யோசிக்க வைக்கிறது. அவரின் உரைகளின் பகுதிகள்.

* பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்,
அரசு ஒரு பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து தற்போது தேர்தல் எனும் பயங்கரவாதத்தை அரங்கேற்றிக் கொண்டு வருகின்றது.

இத்தேர்தல் நாட்டு மக்கள் விரும்பும் தேர்தலல்ல. இவ்வாறு முன்கூட்டி நடத்துவதனூடாக நாட்டு மக்கள் தன்னோடு இருப்பதாக அரசு சர்வதேசத்துக்கு காட்ட முனைகிறது. அந்த வியூகம் தோல்வியடையப் போகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை இந்த அரசாங்கம் கணக்கில் எடுக்காமல் கடந்த ஒன்றரை வருட காலத்தில் நான் பட்ட அவஸ்தைகளுக்கு இத்தேர்தலின் மூலம் முடிவு கட்டலாம்.

எனவே சமூகத்தின் இருப்பையும் பலத்தையும் சர்வதேசத்துக்கு காட்டுவோம்.

* காத்தான்குடி தேர்தல் பிரசார கூட்டம்,

முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரால் பெற்றுக்கொள்வதற்காகவே நாம் தனித்து போட்டியிடும் தீர்மானத்தை எடுத்தோம். கிழக்கில் எங்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொத்துவில் அருகம்பே வீதியில்,

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் பதவியில் நான் இருந்தும் எமது கட்சியை மாற்றான் தாய் மகனாகவே அரசாங்கம் கவனித்து வந்தது.

மந்திரி பதவி ஒரு பொருட்டல்ல. அப்பதவி எனக்கு கடிவாளமுமல்ல. முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியை தடை செய்து கிழக்கில் சிறுபான்மையினராக வாழும் சிங்கள சமூகத்தை வெளியுலகிற்கு சக்தியுள்ளதாக காட்டுவதே அரசாங்கத்தின் நோக்கம்.

அரசை விமர்சிக்கிறோம். எல்லையுடன் பேசுகிறோம். அரசு அதனை ஜீரணிக்க வேண்டும். அடாவடித்தனம் அச்சுறுத்தலால் மு.கா.வை அடக்கலாம் என்பது பகற்கனவு.

* சம்மாந்துறை பிரதான வீதி பிரசாரக் கூட்டம்

முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தினால் அரசு தடுமாறிப் போயுள்ளது. அதன் வெளிப்பாடே எமது கட்சியின் வெற்றியை தடுப்பதற்காக பல்வேறு கோணங்களில் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மு.கா. தனித்துப் போட்டியிடுவது அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

* பாலமுனை தேர்தல் பிரசார கூட்டம்

முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் வியூகம் ஆப்பிழுத்த குரங்காக அரசை மாற்றியுள்ளது.

* கிண்ணியா, குறிஞ்சாங்கேணி தேர்தல் பிரசாரம்
பொம்மை ஆட்சியொன்றில் கைகொட்டி வாய்பொத்தி மௌனியாக இருந்து வர எமது கட்சி தயாரில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் கேட்பது குறித்து நாடே மகிழ்ச்சியடைகிறது. எமது தனித்துவம் காக்கப்படும்.

* வாழைச்சேனை பிரசார கூட்டம்

ஆட்சி அதிகாரங்களை வைத்துக்கொண்டு அரசாங்கம் எங்களை, நாங்கள் இணைந்த காலத்திலிருந்தே மாற்றான் தாய் மனப்பான்மையோடுதான் நடத்தி வருகின்றது.
நாடு, நகர அபிவிருத்திச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது மாகாண சபை உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது. அப்போது எமது உறுப்பினர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டனர்.
ஆளுநர்களாகவும், அரச அதிபர்களாகவும் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கத்தக்கதாக வடக்கு கிழக்கில் மட்டும் இராணுவ படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அபரிமிதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது ஏன்?

* நிந்தவூர் பிரசாரக் கூட்டத்தில்

13ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு அமைய மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரத்தை அரசு மிகவும் மோசமாக கபளீரகம் செய்துள்ளது. பாராளுமன்றத்தை கலைப்பது போன்று மாகாண சபையை ஜனாதிபதிக்கு கலைக்க முடியாது.

13ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அரசு நினைத்தபடி எதனையும் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாதென்ற கோட்பாட்டினை அரசு மீறியுள்ளது.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக உத்தரவாதம் வழங்கும் இவ்வரசு, கொடுத்த அதிகாரத்தினை மிகவும் மோசமாக பறிக்கும் முகமாக செயற்பட்டுள்ளது.

மு.கா. யாரிடமும் அடமானம் வைக்கப்படுவதற்கோ சரணாகதி அரசியலை செய்வதற்காகவோ உருவாக்கப்படவில்லை.

* பாலமுனை தேர்தல் பிரசார கூட்டம்

ஒரு பயங்கரவாதத்தை நிறைவு செய்துள்ள அரசு அடிக்கடி தேர்தல் நடத்துகின்ற ஒரு வித்தியாசமான ஜனநாயக பயங்கரவாதத்தை எம் மத்தியில் அரங்கேற்றி வருகிறது.

* ஏறாவூர் காட்டுப்பள்ளி குல்லியத்துதாரில் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம்.

மாகாண சபை தேர்தல் அடாவடித்தனங்களும் அட்டகாசங்களும் நிறைந்ததாக இடம்பெறுமானால் அரசின் மீது தற்போது திரும்பியுள்ள சர்வதேசத்தின் பார்வை மேலும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்.

* மருதமுனை கடற்கரை வெளியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை பௌத்த சமூகத்தின் விரோதியாகக் காட்டுவதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் இவ் அரசாங்கத்தின் அனுக்கிரகத்தோடு நடக்கும் போது அதனையிட்டு நாம் கவலையடைகிறோம்.
அக்கரைப்பற்று பிரசார மேடையில் முஸ்லிம்களின் உணர்வுகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு போட்டியிடும் நாம் இனிமேலும் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்க முடியாது. மக்களின் உயிர் நாடியை நாங்கள் தொட்டு விட்டோம் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

* சாய்ந்தமருது கடற்கரை பிரதேச பிரசாரக் கூட்டம்

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் தலைவிரித்தாடிய பயங்கரவாதப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜனாதிபதி காவி உடை தரித்தோரால் நாட்டில் இன்று முன்னெடுக்கப்படும் அடாவடித் தனங்களையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கிண்ணியா விஷன்' கேட்போர் கூடப் பிரசாரக் கூட்டத்தில்

மு.கா.தனித்துப் போட்டியிடுவது அரசாங்கத்தினருக்கு சிம்மசொப்பனமாக இருக்கின்றது. ஏன் தனித்து போட்டியிட விட்டோம் என கைசேதப்படுகிறார்கள்.

site counter