அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 3 டிசம்பர், 2012

காரியாலயம் செல்கையில் மஹ்ரூப்புக்கு மாரடைப்பு - மாளிகாவத்தையில் ஜனாஸா நல்லடக்கம்



(எம்.ஜே.எம். தாஜுதீன்)

கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சருமான மொஹமட் மஹ்ரூப் இன்று (03) காலை மாரடைபினால் காலமானார்.

தமது காரியாலயத்துக்குச் சென்றுகொண்டிருந்தவேளை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக  கொழும்பு கிங்ஸ் வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபின்னர் அங்கு அவர் காலமானார். 

அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல் 3:30 மணிக்கு மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். ஜனாஸாத் தொழுகை கிரேன்ட்பாஸ் அவ்வல் சாவியா பள்ளிவாசலில் நடைபெறம் என குடும்பத்தினர் அறிவித்தனர். 


சகோதரி றிசானாவுக்கு பொது மன்னிப்பு..?


(gtn) இலங்கைப் பணிப் பெண் ரிசானா நாபீக்கிற்கு பொது மன்னிப்பு வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக கடமையாற்றிய நாபீக்கிற்கு, சவூதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

சிசுவொன்றை கொலை செய்ததாக நாபிக்கிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சவூதி முடிக்குரிய இளவசரர் சல்மன் பின் அப்துல் அசீஸ் அல் சாட் அறிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்டுள்ள மன்னருக்கு ஆசி வேண்டி இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2007ம் ஆண்டு முதல் சவூதி அரேபிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டள்ள ரிசானா அநேகமாக விடுதலை செய்யப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அரச பொதுமன்னிப்பு வழங்கப்பட்டோர் பட்டியலில் ரிசானாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என இலங்கை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ரிசானாவை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை  இலங்கை அதிகாரிகள் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்


உலக மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள். உடலளவில் பலவீனமாக இருந்தாலும் , மனதளவில் தைரியமாக உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. உடல் குறையை வைத்து, சம உரிமை வழங்க சமூகம் மறுக்கிறது.

அரசியல், சமூக, கலாசாரம், பொருளாதாரத்தில் மற்றவர்களைப் போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல், டிச., 3ம் தேதி, சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

15 சதவீதம் பேர் :

இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாக உள்ளனர். மேலை நாடுகளில், ஊனம் வெளியே தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்களை கூட மாற்றுத்திறனாளிகளாக கருதுகின்றனர். இன்னும் சில நாடுகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும், மாற்றுத்திறனாளிகளாக கருதி சலுகைகள் அளிக்கின்றன. இந்தியாவில், வெளியில் தெரியும் ஊனத்தை தான் அரசு ஏற்கிறது. அப்படியும் சிறப்பு சலுகைகள் கிடைப்பதில்லை.

தனி வசதிகள்: 

பொது இடங்களில் சக்கர நாற்காலியுடன் ஏறுவதற்கு வசதி தேவை என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும், சில இடங்களை தவிர மற்றவற்றில் நிறைவேற்றப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதமாக, தனி பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும். இவர்களை வேலைக்கு எடுக்க தயங்குவதை தவிர்க்க வேண்டும். 

பொருளாதர வளர்ச்சி:

மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை ஏற்காமல், நாடு வளர முடியாது. சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு, மாற்றத்திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு. தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும், மாற்றுத்திறனாளிகள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையை பறித்து விடக்கூடாது. 

நீதித்துறை தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றுமொரு அதிர்ச்சி..!


பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணைக்கு  எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் இன்று -3-12-2012 தீர்மானித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுத் தாக்கல் செய்திருந்த இந்த மனுவில் பாராளுமன்ற நிலையியற்  கட்டளை 78-A பிரிவை சட்டப்பூர்வமற்றது என தீர்ப்பளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மனுவை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான நிமல் காமினி அமரதுங்க, பிரியசாத் டெப் மற்றும் ஈவா வணசுந்தர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு தொடர்பிலுள்ள ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு அறிவித்த நீதிமன்றம் பிரதிவாதிள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்து இரண்டு வாரங்கள் கடந்ததன் பின்னர் அது தொடர்பாக பதில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு மனுதார்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஐந்து கோள்களை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு - பேராசிரியர் சந்தன ஜயரத்ன


எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஐந்து கோள்களை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிட்டியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிக்கிறார்.
சூரிய மணடலத்தின் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை மக்கள் காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் வியாழன் கோள் புவியை மிகவும் நெருங்கவுள்ளதால் இன்றிரவு வானில் அதனை பிரகாசமாக காண முடியும் எனவும் பேராசிரியர் கூறியுள்ளார்

எகிப்தின் புதிய அரசியல் அமைப்பை வரவேற்கிறார் பேரறிஞர் யூஸுப் அல் கர்ளாவி!


எகிப்து அரசினால் புதிதாக வரையப்பட்டுள்ள அரசியல் அமைப்பை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் சபையின் தலைவரான செய்க் யூஸுப் அல் கர்ளாவி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பான இறுதி முடிவை மக்களே எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“எகிப்து இவ்வாறான ஓர் அரசியல் அமைப்பை ஒருபோதும் கண்டிருக்கவில்லை. மன்னர் ஆட்சிக் காலத்தின் போதோ புரட்சியின் போதோ இவ்வாறான யாப்பு இருக்கவில்லை“ என கர்ளாவி டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எகிப்திய மக்களுக்குத் தேவையான கோட்பாடுகளையும் பெறுமானங்களையும் இது உள்ளடக்கியுள்ளது. இதில் குறைபாடுகள் இருந்தால், அதனை பின்னர் ஈடு செய்யலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் அமைப்பு சபையில் இருந்து வாபஸ் பெற்ற மதச் சார்பற்ற சக்திகளுக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்: “நீங்கள் வாபஸ் பெற்றிருக்கக் கூடாது. உங்களது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்திருக்கலாம்.“

அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி முயற்சி! பதுளை சம்பவம் குறித்து ஹக்கீம் தெரிவிப்பு!



அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சதி முயற்சிசெய்து வருகின்றனர் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை பதுளை ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதுளையில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அங்கு சென்றுள்ள ரவூப் ஹக்கீம் மேலும் உரையாற்றுகையில்,
ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்ட போது முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன. அவ்வாறானதொரு குற்றப்பிரேரணை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதமும் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளது.
இதன்போது முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இல்லாமல் செய்வதற்காகவே இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சிலர் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது நாம் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சதி முயற்சிசெய்து வருகின்றனர் அண்மைக்காலமாக பதுளையிலும் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் இதில் ஒரு அங்கமாவே பார்க்கவேண்டியுள்ளது
பதுளையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கும் கொண்டுசென்று அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பதுளையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

site counter