சாய்ந்தமருது முதலாம் குறிச்சியில் வீடு ஒன்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை கல்முனை சாஹிராக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அயல் வீட்டு குடும்பத்தினர் மத்தியில் பணக் கொடுக்கல் வாங்கல் தகராறு சண்டையாக மாறியதன் எதிரொலியாகவே இத்தீவைப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் வீடு மற்றும் கார் என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று இரவு இடம்பெற்ற கைகலப்பின் போது ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்தே கத்தியால் குத்தியவரின் வீடு மற்றும் கார் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
கத்திக் குத்துக்கு இலக்கான நபர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிக புலனாய்வு விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.