அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 29 நவம்பர், 2012

1300 கி.மீ. தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணையை பாகிஸ்தான் சோதித்தது




MORE VIDEOS
இஸ்லாமாபாத் : அணுகுண்டை தாங்கி சென்று 1,300 கி.மீ. இலக்கை தாக்கும் சக்தி படைத்த புதிய ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று சோதனை செய்தது. பயிற்சிக்காக ஏவுகணையை சோதனை செய்ததாகவும், சோதனை வெற்றி என்றும் பாகிஸ்தான் ராணுவம் கூறியது. காவ்ரி என்று அழைக்கப்படும் ஹாட்ப்,5 என்ற கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் சோதனை செய்தது.

இது இந்தியாவின் உட்பகுதியை தாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதற்காக ஏவுகணை சோதனை நடைபெற்றது. இந்த ஏவுகணை திரவ எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. சாதாரண மற்றும் அணு குண்டை தாங்கிச் சென்று 1300 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால், எங்கிருந்து சோதனை செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

முஹம்மது நபி அவமதிப்பு திரைப்படம் - எகிப்தில் 7 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு


நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து, படம் தயாரித்த ஏழு பேருக்கு, எகிப்து கோர்ட், மரண தண்டனை அறிவித்துள்ளது. 

அமெரிக்காவின், நியூயார்க் நகர இரட்டைக் கோபுர தகர்ப்பு நினைவு தினம், செப்., 11ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அமெரிக்காவில், "முஸ்லிம்களின் அப்பாவிதனம்' என்ற பெயரில், ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில், நபிகள் நாயகத்தை, கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால், உலகம் முழுவதும் உள்ள, முஸ்லிம்கள் இதற்கு கண்டனம் செய்தனர். எகிப்து, லிபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில், இது தொடர்பாக, பெரிய வன்முறை ஏற்பட்டது. லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில், அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டார். 

இந்த படத்தை தயாரித்த, எகிப்து நாட்டைச் சேர்ந்த, நகோலா பாஸ்லி உள்ளிட்ட ஏழு கிறிஸ்துவர்கள், தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர். இந்த சர்ச்சைக்குரிய படம் தயாரித்தவர்கள் மீதான வழக்கில், கெய்ரோ கிரிமினல் கோர்ட், நேற்று 28-11-2012 தீர்ப்பு கூறியது. மத துவேஷம் மற்றும் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது தொடர்பாக, ஏழு பேருக்கு, மரண தண்டனை அளிப்பதாக, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பலஸ்தீனர்களின் போராட்டத்தில் இலங்கை கைகோர்த்து நிற்கும் - மஹிந்த அறிவிப்பு




பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் 29-11-2012 இன்றாகும். இதனையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

பலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமை, இறைமை என்பன இன்னமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர்களது நிலத்தில் அதிகமான பகுதி அவர்களுக்கு இல்லாதுபோயுள்ளது என்பதனையும் சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டுவதற்கு பலஸ்தீன ஒருமைப்பாட்டுதினம் முக்கியத்துவம் பெறுகின்றது.

பலஸ்தீன மக்கள் நியாயத்துவம் மற்றும் பிறர் உடமையாக்க முடியாத தமது உரிமைகள் என்பவற்றை அடைந்துகொள்வதற்காக பலதசாப்த காலமாக மேற்கொண்டுவரும் போராட்டத்தில் இலங்கை மக்களும் அவர்களுடன் கைகோர்த்து நிற்பதுடன், எதிர்காலத்திலும் அவ்வாறே அமையும். 

இஸ்ரேலுடன் காணப்படுகின்ற இறைமைமிக்க பலஸ்தீன அரசு ஒன்றினை உருவாக்கும் இறுதிக் குறிக்கோளுடன் சமாதானத்திற்கான சகல வழிகளையும் தேடிப்பார்த்தல் வேண்டும். அதனால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சமாதான செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு முயற்சித்தல் வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் பட்சத்தில் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திற்கும் சமாதானம் கிட்டும்.

பலஸ்தீன மக்களின் அரசியல் ஐக்கியத்துவம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் என்பன ஐக்கிய நாடுகளின் முன்மொழிவின் மீது இரு நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கான தீர்வினை வெற்றிகொள்ள காரணமாக அமைவதுடன் இலங்கையானது இந்நிலைக்கு தமது மனப்பூர்வமான ஒத்துழைப்பினை வழங்கும். கரடுமுரடான அரசியல் மற்றும் பொருளாதார பாதைக்கு மத்தியிலும் கூட தாபனங்களை கட்டியெழுப்புவதில் பலஸ்தீன அதிகாரசபை அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

பலஸ்தீன கனவு நனவாகுமா..? உலகெங்கும் பரபரப்பு - இன்று மாலை முடிவு தெரியவரும்..!




(tn) பலஸ்தீனம் ஐ. நா. வின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இன்று  29-11-2012 சமர்ப்பிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மாலை ஐ. நா. பொதுச் சபையில் இந்த விண்ணப்பத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக பலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐ. நா.  உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்தை பெறுவதன் மூலம் இஸ்ரேலுடன் இரு நாட்டு தீர்வுத்திட்டத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முக்கிய படியாக அமையும் என பலஸ்தீன நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேல், அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே பலஸ்தீன நிர்வாகத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நியூயோர்க்கில் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ. நா. வின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்தைப் பெறுவதற்கு 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பலம்வாய்ந்த பாதுகாப்புச் சபையின் அங்கீகாரம் தேவைப்படாது. இதற்கு 193 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பொதுச் சபையின் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் மாத்திரமே போதுமானது. ஆனால் பொதுச் சபையில் இருக்கும் மூன்றில் இரண்டு நாடுகள், அதாவது 132 நாடுகள் பலஸ்தீன் தேசத்தை அங்கீகரித்துள்ளன. எனவே இன்றைய வாக்கெடுப்பில் பலஸ்தீனம் வெற்றிபெறுவது உறுதியானது.


பொதுச்சபையில் பலஸ்தீன விண்ணப்பத்தின் வாக்கெடுப்புக்கு முன்னர் இன்றைய தினம் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் 193 அங்கத்துவ நாடுகளின் முன்னிலையில் தமது உரையை நிகழ்த்தவுள்ளதாக ஐ. நா. வின் பலஸ்தீன தூதுக் குழுவின் பேச்சாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த 2011 செப்டெம்பரில் ஐ. நா. வின் முழு அங்கத்துவ நாட்டுக்காக பலஸ்தீனம் விண்ணப்பித்த போது அமெரிக்காவின் எதிர்ப்பால் அது தடைப்பட்டது. ஐ. நா. வின் முழு அங்கத்துவ நாடாவதற்கு அதன் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்தை பெறவேண்டும். 

எனினும் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடான அமெரிக்கா இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. மீறி வந்தால் தாம் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விண்ணப்பத்தை ரத்துச் செய்வதாக அமெரிக்கா எச்சரித்தது. இந்த விடயத்தில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டே ஐ. நா.வை அணுகியிருக்க வேண்டும் என அமெரிக்கா அப்போது விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் பலஸ்தீனின் உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்திற்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பலஸ்தீனம் தனிநாடு குறித்து யூத தேசத்துடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாறாக பேச்சுவார்த்தையில் இருந்து விலகி நின்று ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்கக்கூடாது என அமெரிக்கா, இஸ்ரேல் விமர்சித்துள்ளன.

“இந்த செயற்பாடு பலஸ்தீன மக்கள் தனிநாட்டை பெறும் முயற்சியை நெருங்கச் செய்யும் என நாம் நினைக்கவில்லை” என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நுலான் கடந்த திங்கட்கிழமை வொஷிங்டனில் வைத்து ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். “இது தவறான முடிவு என நாம் நம்புகிறோம்” எனக் கூறிய அவர் “அதற்கு நாம் எதிராக செயற்படுவோம்” என வலியுறுத்தினார். இது தொடர்பில் வாக்களிக்கவுள்ள ஏனைய நாடுகளுக்கு தமது நிலைப்பாடு குறத்து அறிவுறுத்தவுள்ளதாக நுலான் மேலும் கூறினார்.

பிரான்ஸ் ஆதரவு

இதனிடையே பலஸ்தீனின் ஐ. நா. விண்ணப்பத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. பலஸ்தீனர்களின் தனிநாட்டு எதிர்பார்ப்புக்கு பிரான்ஸ் நீண்ட காலமாக ஆதரவு அளித்து வருகிறது. எனவே பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லவ்ரோவ் பபியஸ் அறிவித்தார்.

இது குறித்து பபியஸ் பிரான்ஸ் பாராளுமன்றத்தின் கீழவையில் விளக்கம் அளிக்கும் போது, “பலஸ்தீன தனிநாட்டு பிரான்ஸ் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வருவது உங்களுக்கு தெரியும். இதனால்தான் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பிரான்ஸின் பதில் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு நாம் ‘ஆம்’ என்றுதான் பதில் அளிப்போம்” என்றார்.

இதன்மூலம் ஐ நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடான பிரான்ஸ் ஐரோப்பாவின் முதலாவது பிரதான நாடாக பலஸ்தீன விண்ணப்பத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இதில் ஜெர்மனி எதிராக வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளதோடு பிரிட்டன் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. தவிர, போர்த்துக்கல், ஸ்பைன் பலஸ்தீனின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்துக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளன.

ஆனால் அவுஸ்திரேலியா இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்த வாக்களிப்பில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ள அவுஸ்திரேலியா 27 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மை யான நாடுகள் ஆதரவாக வாக்களித்தால் அதற்கு தாமும் ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளது. என்றாலும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியான் கில்லாட் பலஸ்தீனின் விண்ணப்பத்திற்கு எதிராக வாக்களிக்கவே திட்டமிட்டிருந்த தாகவும் தமது கட்சியின் அழுத்தத்தாலேயே வாக்களிப்பதைத் தவிர்க்க தீர்மானித்ததாகவும் தெரிய வருகிறது என அந்நாட்டின் ஏ.பி.சி. தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்கா மற்றும் ஆதரவு நாடுகளின் வாக்குகள் இன்றியே பலஸ்தீனால் இந்த விண்ணப்பத்தின் மீது பொதுச் சபையில் வெற்றிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.சி.சி. செல்லும் வாய்ப்பு

பலஸ்தீனம் தற்போது ஐ.நா.வின் நிரந்தர பார்வையாளர் அந்தத்தைப் பெற்ற நாடாக உள்ளது. இந்த அந்தஸ்துக்கு சர்வதேச அமைப்புகளுக்கும் விண்ணப்பிக்க முடியும். இதன்கீழ் ஐ. நா. பொதுச்சபை கூட்டங்களில் பேசவும் செய்முறை தொடர்பான வாக்கெடுப்புகளை கொணரவும் கையொப்பமிடவும் உரிமை உள்ளது. எனினும் தனது தீர்மானங்களில் மற்றும் நிலையான கருத்துகளில் வாக்களிக்க பார்வையாளர் அந்தஸ்துள்ள நாட்டுக்கு உரிமை இல்லை. 

இந்நிலையில் உறுப்பினரல்லா பார்வையாளர்கள் ஐ. நா. பொதுச் சபை அரங்கில் உறுப்பினர் நாடுகளுக்கு அடுத்தும் பிற பார்வையாளர்களுக்கு முன்பும் அமர்த்தப்படுவர். உறுப்பினரல்லாத பார்வையாளராக அங்கத்துவம் பெறுவதன் மூலம் ஐ.நா. குறித்த நாட்டை ஒரு இறையாண்மை உள்ள தேசமாக ஏற்கும். இதன்மூலம் பொதுச் சபை விவாதங்களில் பங்கேற்க முடியும் என்பதோடு ஐ. நா. அமைப்புகளிலும் இணைய வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக ஹேகிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் (ஐ. சி. சி) இணைய வாய்ப்பு உள்ளது.

1967 ஆம் ஆண்டு எல்லையைக் கொண்ட மேற்குக் கரை, காசா மற்றும் கிழக்கு ஜெரூசலம் ஆகிய பகுதிகளைக் கொண்ட பலஸ்தீன தேசத்திற்கே ஐ. நா. உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்து கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பலஸ்தீன எல்லைகளான மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத யூத குடியேற்றங்களை அமைத்துள்ளது. இதற்கு எதிராக உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்தைப் பெறும் பலஸ்தீனத்துக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வரை செல்ல முடியும்.

சுவிட்சர்லாந்து கடந்த 2002 ஆம் ஆண்டுவரை ஐ. நா.வின் உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்து பெற்ற நாடாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்கா, இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

எனினும் பலஸ்தீன முயற்சிக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் கடைசிவரை தனது இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பலஸ்தீனம் ஐ. நா. வின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க யுநெஸ்கோவுக்கான தனது நிதியை நிறுத்திக்கொண்டது. இதனால் யுனெஸ்கோ தனது பட்ஜட்டில் 22 வீத நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டது.

அதேபோன்று யுனெஸ்கோவில் இணைந்த பலஸ்தீனத்திற்கு எதிராகவும் அமெரிக்கா நிதி உதவியை இடைநிறுத்தியது. அதேபோன்று பலஸ்தீன் தனி நாட்டு கோரிக்கையை முன்னெடுத்தால் அதன் மீது பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்க கொங்கிரஸ் சபை எச்சரித்திருந்தது. மறுபுறத்தில் 1992 இல் செய்து கொள்ளப்பட்ட ஒஸ்லோ அமைதி உடன்பாட்டை மீறியே பலஸ்தீனம் ஐ. நா. வை அணுகுவதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இந்த மாத ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார். 

இதில் இஸ்ரேலுடனான பிரச்சினையை தீர்க்குமாறு பலஸ்தீன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சென்றால் அதனைத் தடுக்க இஸ்ரேல் கடும் நடவடிக்கையை எடுக்கும் எனவும் அவர் எச்சரித்தார். எனினும் அது எவ்வாறான தடைகள் என்பது குறித்து அவர் விளக்கவில்லை. குறிப்பாக பலஸ்தீன நிர்வாகத்தை கொண்டு செல்ல இஸ்ரேல் வழங்கும் வரி வருமான பரிமாற்றத்தை நிறுத்திவிடுவது, மேற்குக்கரையை முடக்குவது என இஸ்ரேல் கடும் தடைகளை விதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் இந்த விண்ணப்பத்தின் மூலம் அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட தாம் முற்படவில்லை என பலஸ்தீன நிர்வாகத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். இந்த விண்ணப்பத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்த அடுத்த தினத்திலேயே இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேல்- பலஸ்தீனத்திற்கு இடையில் விட்டு விட்டு கடந்த இரண்டு தசாப்தங்களாக தொடரும் அமைதி பேச்சுவார்த்தை மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் அதிகரிக்கும் யூதக் குடியேற்றங்கள் காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மஹ்மூத் அப்பாஸின் ஐ. நா. விண்ணப்பத்திற்கு காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷாலும் ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை மு.கா ஏற்றுக்கொள்ளளாது! மேலும் வலுவூட்டப்பட வேண்டும்!



-அமைச்சரின் ஊடகச் செயலாளர்-
இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றோர் கூறிவருவதைப் போல, அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள மாட்டாது எனவும், அவர்களது நிலைப்பாட்டிற்கு எதிரான அபிப்பிராயத்தை கொண்டுள்ள அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் சிலர் கைகோர்த்து வருவதாகவும் அக் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
காலியில், இஸ்லாமிய புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட முஹர்ரம் போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற அலிப் மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தில் செவ்வாய்க்கிழமை (27) மாலை நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். காலி, தலாபிடிய கோங்கஹ வீதியில் இந் நிகழ்வு இடம்பெற்றது. மத்ரஸாவின் அதிபர் மௌலவி சாகிர் ஹூசைன் இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
முன்னதாக காலி மல்ஹருஸூல்ஹியா தேசிய பாடசாலை பரிசளிப்பு விழாவிலும் அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதியாக பங்குபற்றியதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், காலியில் 850 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமையவுள்ள இடத்தையும் நீதியமைச்சர் ஹக்கீம், பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானாயக்கார மற்றும் நீதியமைச்சின் பொறியியலாளர் ஆகியோரும் சென்று பார்வையிட்டார்.
காலியில் நடந்த இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்வில் உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது;
அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச ஆகியோர் கூறிவருவதைப் போல அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதற்கு நாங்கள் கையுயர்த்தப் போவதில்லை.
அதிகாரம் பண்முகப்படுத்தப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கத்திற்கும், பகிர்வுக்கும் ஊடாக கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதிகாரம் மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய செயல்பாடு இந் நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு பயனளிககக் கூடியவாறு 13 ஆவது திருத்தத்திலே உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், அது இந்தியாவின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற காரணத்தினால் வேறு விமர்சனப் பார்வை இருந்து வருகின்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை, பாராளுமன்றத்திற்கு உள்ளும் புறமும், 13ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. அதற்கான போராட்டத்தில் நாம் அரச தரப்பிலும் கட்சித் தலைவர்கள் சிலருடன் ஓர் உடன்பாட்டுடன் உள்ளோம்.
13 ஆவதுதிருத்தம் மேலும் வலுவூட்டப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் சிலரிடம் காணப்படுகின்றது.
சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றவர்கள் மட்டும் தான் இந்த அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் அல்லர். அவர்களின் போக்கிற்கு மாற்றமான நிலைப்பாட்டை உடைய என்னைப் போன்ற இன்னும் கட்சித் தலைவர்களும் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளனர். நாங்கள் அரசாங்கத்துக்குள்ளே அவ்வாறான ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
இன்று நான் காலியில் கலந்துகொண்ட நிகழ்வுகளில் ஒரு புதிய பரிமாணத்தை காண்கின்றேன். நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம் மாணவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் தங்களுடைய கல்வியை சிங்கள மொழியில் பயின்றாலும் கூட, காலி நகர்புறத்திலே கூடுதலான முஸ்லிம மாணவர்கள் சிங்கள மொழியிலே கல்வி கற்பதை நான் பார்க்கிறேன். இங்கு அரங்கேறிய எல்லா நிகழ்வுகளிலும், குறிப்பாக துஆப் பிரார்த்தனை, சொற்பொழிவுகள் என்பனவற்றில் அநேகமானவை சிங்களத்தில் இடம்பெற்றதை நான் அவதானித்தேன்.
இதற்கு மேலாக இங்குள்ள மல்ஹருஸூல்ஹியா தேசிய பாடசாலை உட்பட ஏனைய பாடசாலைகளிலும் முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழியில் கல்வி கற்பதை காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மொழியில் படிப்பவர்கள் சிங்கள மொழியில் கற்பவர்களை விட குறைவாகவே உள்ளனர். ரிச்மண்ட், மஹிந்த, புனித அலோசியஸ் போன்ற கல்லூரிகளில் சிங்கள மொழியில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் உள்ளனர்.
இதில் ஒரு பாதிப்பும் இருப்பதை நான் பார்க்கிறேன். சிங்கள மொழியை படிக்கத்தான் வேண்டும், ஆனால், கொழும்பு, கண்டி போன்ற மாவட்டங்களில் பல்கலைக்கழக அனுமதியில்; ஆகக் கூடிய இஸட் புள்ளிகளை பெறவேண்டிய நிலை இருக்கும் பொழுது அடுத்தபடியாக காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கு கூடுதல் புள்ளிகள் தேவைப்படுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களிலிருந்து பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் தமிழ் மொழி மூல முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். அத்துடன், இம் மாவட்டங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் சிங்கள மொழி மூல முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகும்.
எனவே, இந்த நாட்டில் மன்னார், முல்லைத்தீவு, மொனராகலை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து தான் குறைந்த இஸட் புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள். பின்தங்கியனவாக கருதப்படும் அந்த மாவட்டங்களை விட காலி மாத்தறை மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவானது என்பது கவலைக்குரியதாகும். இவ்வாறு தமிழ் மொழி மூலக் கல்வி இப் பிரதேசங்களில் பாரதூரமான வீழ்ச்சியை அடைந்துள்ளது என்பதை புள்ளிவிபரங்களின் ஊடாக கண்கிறேன். ஆகையால் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் புதிய பரிமாணம் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளப்படவேண்டியதாகும்.
தமிழ் மொழிப் பாடசாலைக்கான கல்வி வலயம் முன்பிருந்து பின்னர் மாகாண சபைகள் நிறுவப்பட்டபோது பண்முகப்படுத்தலோடு இல்லாமல் போய்விட்டது.
அத்துடன், ஆன்மீக ரீதியான ஒரு ஆழமான ஈடுபாட்டை தென் இலங்கையிலே குறிப்பாக காலி, வெலிகம, மாத்தறை பிரதேசங்களிலே அவதானிக்க முடிகிறது. அவ்வாறே ஆன்மீக ரீதியான முரண்பாடுகளையும் காண முடிகிறது.
தரீக்காக்களின் செயல்பாடுகளின் ஊடாக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு விதமான ஆன்மீக விழிப்புணர்ச்சி ஏற்பட்டதை மறுக்க முடியாது. காலாகாலம் இந்த நிலை பேணப்பட்டு வந்திருக்கிறது.
ஆன்மீக ஈடுபாடு, அதையொட்டிய கலாசார, பண்பாட்டு பாரம்பரியம் என்பன வரவேற்கத்தக்கதாக இருப்பதை இந்த சமூகத்தில் உள்ள பண்முகத் தன்மையின் வெளிபாடாக நான் பார்க்கிறேன். அந்தப் பண்முகத் தன்மையையும், ஆன்மீக ஈடுபாட்டையும் நாம் வளர்த்துக்கொள்ளும் அதேவேளையில் பாடசாலை கல்வியில் அண்மைக்காலமாக காணப்படும் வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கும் வழிவகைகளை தேட வேண்டும். இப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினரோடு ஒன்றிணைந்து முஸ்லிம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஈடுபட உள்ளேன்.
காலி என்பது முஸ்லிம்களின் ஒரு பூர்வீகப் பூமி என்றால் மிகையாகாது. பஹ்ஜதுல் இப்ராஹிமீய்யா என்பது இலங்கையில் உள்ள ஆகப் பழமை வாய்ந்த அரபு மத்ரஸாவாக திகழ்கின்றது. நூறு வருடங்களையும் தாண்டி அது இன்னமும் உயிர்துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது. வெலிகமயில் அமைந்துள்ள மத்ரஸதுல் பாரி இன்னொரு பழைய மத்ரஸாவாகும். பொதுவாக இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் மத்ரஸாக்கள் தோற்றம் பெறுவதற்கு முன்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தென்மேற்கு கரையோரப் பிரதேசத்தில் தான் மத்ரஸாக்கள் காணப்பட்டன என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
அத்துடன், இங்கு வாழும் பெண்களுக்கு அரபுத் தமிழில் கூடிய பரீட்சயம் இருக்கின்றது. அரபுத் தமிழில் தலைபாத்திஹா ஓதுவதற்கு இங்குள்ள பெண்களுக்கு தெரியும். அவ்வாறே ரபியுல் அவ்வல் மாதத்தில் முபாரக் மாலை இன்று ஏழு நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) மீது புகழ்பாடும் வரலாற்று சுருக்கத்தை அரபுத் தமிழில் பாடுவோரும் இப் பிரதேசத்தில் உள்ளனர்.
தமிழ் மொழியை அரபு லிபியில் எழுதும் மொழி நடையே அரபுத் தமிழ் என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் இது வழக்கிழந்து அருகிச் சென்றாலும் தென்மேற்கு இலங்கையில் அது இன்னமும் ஓரளவு புழக்கத்தில் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.
இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
மௌலவி பிஷ்ருல் ஹாபியும் இந் நிகழ்வில் உரையாற்றினார்.

பனி மலைகள் வேகமாக உருகி வருவதால் கடல் மட்டம் அதிவேகமாக உயர்கிறது!


உலகில் வெப்ப நிலை உயர்ந்து வருவதன் காரணமாக கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூமியின் வெப்ப நிலை உயர்ந்து வருவதால், பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச பருவநிலை மாற்றக்குழு ஆய்வின் படி, அக்குழு முன்பு கணித்ததை விட 60 சதவீதம் வேகமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதேவேளை கட்டார், டோகாவில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உலக வெப்ப மயமாக்கல் குறித்து மிகுந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் , கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உறைபனி மலைகள் நிறைந்த நாடுகளில் புவி வெப்ப மயமாவதால் இவைகள் வேகமாக உருகி வருகிறது.
இதனை கட்டுப்படுத்துவது குறித்தும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

6 மண்டையோடுகள் மாத்தளையில் மீட்பு

 மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்த மனித எலும்புக்கூடுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து மண்டையோடுகள் ஆறும் மீட்கப்பட்டுள்ளன.

இருந்த மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டையோடுகள்  தொடர்பில் மேலதிக பரிசோதனைகளை நடத்துவதற்காக வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த எலும்புக்கூடுகள் கடந்த 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

site counter