அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 2 நவம்பர், 2012

அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு



தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபன்ன - பின்னதுவ பகுதியில் மணிசரிவு ஏற்பட்டுள்ளது. தவத்துடுவ, கொம்பத்தல எனுமிடத்தில் மலைப்பாங்கான பகுதியொன்றிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மண்சரிவு காரணமாக கொட்டாவ – காலிக்கிடையிலான நெடுஞ்சாலையின் தவத்துடுவ முதல் காலி வரையான வீதியின் சுமார் ஒரு கிலோமீற்றர் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த வீதியில் ஒரு மருங்கு மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் இதனால், ஏனைய மருங்கினூடாக இருவழிப் போக்குவரத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

றியாத் நகரில் கொள்கலன் வெடிப்பு; 24 பேர் பலி! பல வாகனங்கள் கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசம்!


சவூதி அரேபிய தலைநகர் ரியாத் நகரில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற எண்ணெய்க் கொள்கலன் வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 120 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ரியாத் நகரின் மேம்பாலமொன்றில் இடம்பெற்ற இவ்விபத்தின் காரணமாக அருகிலிருந்த பல மாடிகளை கொண்ட வணிக கட்டிடத் தொகுதி ஒன்று முற்றாக சரிந்து வீழ்ந்துள்ளது.
அத்துடன் இவ்வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக மேலும் பல கட்டிடங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதுடன் மினிபஸ் உள்ளடங்களாக பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கிரீடம் தேடியோர் அரசியல்வாதியின் சகாக்கள்



காசியப்ப மன்னனின் கிரீடத்தைத் தேடி சிகிரியா காட்டில் தேடுதல் நடத்தியவர்கள் அரசியல்வாதியின் சகாக்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர்கள், கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி அரசியல்வாதியொருவரின் சகாக்கள் என பொலிஸார் மற்றும் வனஜீவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மன்னனின் கிரீடத்தை தேடும் நடவடிக்கையில் மேற்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிக்கும் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தம்புளை அரசியல்வாதியொருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் கேகாலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக குறிப்பிட்ட பொலிஸார் மற்றும் வனஜீவி அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர். 

பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணையில் திஸ்ஸ, வாசுதேவ கையெழுத்திட வில்லையாம்!


பிரதம நீதியரசர் ஷராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தான் கையெழுத்திட வில்லை என இடது சாரியான சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
ஆகையினால் அது பற்றி பேச தான் தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை பிரதமர் நீதியரசருக்கு எதிரான நம்பிககையில்லா பிரேரணையில் தானும் கையெழுத்திடவில்லை என மற்றொரு இடது சாரியான தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் பற்றி தற்போது கருத்து கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மு.கா.வின் இரு எம்.பிக்களுக்கு பிரதி அமைச்சர் பதவி? ஹக்கீமுக்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சு!


-செயிட் ஆஷிப்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு விரைவில் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாண ஆட்சியை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக அரச தரப்பினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளுள் இந்த விடயமும் அடங்கி இருந்ததாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் மெட்ரோ மிரருக்கு தெரிவித்தார்.
கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தற்போது வகிக்கும் நீதி அமைச்சுக்குப் பதிலாக வேறு ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவியும் தவிசாளர் பஷீர் சேகு தாவூதுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியும் மேலும் மூன்று எம்.பிக்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அப்போது மு.கா.வலியுறுத்தி இருந்தது.
அந்த உடன்பாட்டின் பேரிலேயே கிழக்கு முதலமைச்சர் பதவியை மு.கா. விட்டுக் கொடுத்ததுடன் வேறு நிபந்தனைகள் எதுவும் இன்றி கிழக்கின் ஆட்சியமைப்புக்கு ஆதரவு வழங்கியது என்றும் அந்த முக்கியஸ்தர் சுட்டிக் காட்டினார்.
இந்த விடயத்தை நேற்று ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் வலியுறுத்தியதாகவும் அதற்கு ஜனாதிபதி பச்சைக் கொடி காட்டி இருப்பதாகவும் அறிய முடிகிறது.
எவ்வாறாயினும் ஹக்கீமின் அமைச்சுப் பதவி மாற்றத்துடன் மு.கா.வின் இரண்டு எம்.பிக்களுக்கே பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் அதில் ஒருவராக பஷீர் சேகு தாவூத் இருப்பார் எனவும் கட்சியின் உயர் மட்டம் நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
மீதியாகவுள்ள ஒரு பிரதி அமைச்சர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பதை இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது என்றும் அந்த முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு அரசாங்கத்தில் மு.கா. இணைந்து கொண்டது முதலே அக்கட்சியின் எம்.பிக்களான ஹசன் அலி, பைசால் காசிம், ஹரீஸ், தௌபீக் ஆகியோர் பிரதி அமைச்சர் பதவியில் குறி வைத்து பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை முழு அமைச்சு அல்லாமல் மீண்டும் அரை அமைச்சுப் பதவியே வழங்கப்படுமானால் அதனை மு.கா. தவிசாளர் பஷீர் சேகு தாவூத் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று மெட்ரோ மிரருக்கு தெரிவிக்கிறது.

ஜனாதிபதியுடன் மு.கா.சந்திப்பு; தியட்ட கிருள்ள புறக்கணிப்பு குறித்து முறையீடு!


-செயிட் ஆஷிப்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலறி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.
மு.கா.தரப்பில் கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், எம்.பி.க்களான ஹசன் அலி, எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எம்.தௌபீக், எம்.எஸ்.எம்.அஸ்லம் ஆகியோரும் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகபெரும ஆகியோரும் இப்பேச்சு வார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது மு.கா. எம்.பி.க்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்று ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டதாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.
குறிப்பாக தியட்ட கிருள்ள திட்டத்தில் மு.கா. எம்.பி.க்களின் அபிவிருத்தி முன்மொழிவுகள் எவையும் உள்வாங்கப்படவில்லை என்று ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆகையினால் தியட்ட கிருள்ள திட்டத்திற்காக மு.கா. எம்.பிக்களுக்கு விசேட நிதி ஒதுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து திறைசேரி செயலாளர் முன்னிலையில் அமைச்சர்கள் மட்ட கூட்டம் ஒன்றை நடத்தி ஆராய்ந்து தீர்வு வழங்குமாறு அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகபெரும ஆகியோரை ஜனாதிபதி பணித்தார்.
அதேவேளை கிழக்கு மாகாண ஆட்சியை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக அரச தரப்பினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நிறைவேற்றித் தருமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புன்முறுவலுடன் தலையசைத்தார் என்று அந்த மு.கா. முக்கியஸ்தர் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார். .
இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் எம்.பி. மற்றும் பைசால் காசிம் எம்.பி. ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இவர்களுள் பைசால் காசிம் எம்.பி. ஹஜ் கடமைக்காக புனித மக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

site counter