
நாட்டின் தென்மேற்கு கரை புவித்தட்டில் பிளவு ஏற்பட்டிருப்பதனால் நிலநடுக்கத்தின் தாக்கமும் பாதிப்புகளும் கூடுதலாக இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கத் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கக் கூடிய கட்டடங்களை வடிவமைப்பதற்கான வழிகாட்டு உபகுழுவின் தலைவர் சகபந்தே இவ்வாறு எதிர்வு கூறியுள்ளார்.
கொழும்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்து தெரிவிக்கையில்,
'நாட்டின் தென்மேற்கு கரைக்கு அப்பால் 500 - 700 கிலோ மீற்றர் தொலைவில், இந்தோனேசிய - அவுஸ்திரேலிய புவித்தட்டில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அண்மைய புவியியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், புதிய புவித்தட்டு ஒன்று உருவாகி வருகிறது. இதன்காரணமாக, எதிர்காலத்தில் நிலநடுக்கத்தினால் இலங்கையில் அதிகளவு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
ஆவணப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் 1615ஆம் ஆண்டு பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
எதிர்காலத்தில் கொழும்பு உள்ளிட்ட நகர மையத்தின் அருகே நிலநடுக்கம் நிகழுமானால், தற்போதைய அபிவிருத்தி மற்றும் சனத்தொகையின் காரணமாக பாரிய அழிவுகள் ஏற்படும்' என்றார்.