அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்


-நமது செய்தியாளர்-
அமெரிக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்களை தவறாக சித்தரித்து  வீடியோ ஒளி நாடா வெளியிட்டதாக கூறப்படுவதை கண்டித்து இன்று (14.9.2012) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடி தாறுல் அதர் அத்தவிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது.
காத்தான்குடி தாருல் அதர் அத்தவிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்டனப் பேரணியில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கண்டனப் பேரணியில் ஈடுபட்டோர் சுலோகங்களை தாங்கியிருந்தனர்.
‘எமது உயிரிலும் மேலான தூதரை கேவலப்படுத்தாதே, இதை தட்டிக் கேட்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை எனும் அயோக்கிய நாடுகள் சபை எங்கே, அமெரிக்காவே முகம்து நபியை இழிவு படுத்தும் வீடியோவை உடனடியாக தடை செய், இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளை நிறுத்து, அமரிக்காவே உனது காட்டு மிராண்டித்தன்த்தை இஸ்லாத்தில் காட்டாதே போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை கண்டனப் பேரணியில் ஈடுபட்டிருந்தோர் தாங்கியிருந்தனர்.
பேரணி பள்ளிவாயல் முன்றலில் ஆரம்பித்து சற்று தூரம் வரை சென்று நிறைவு பெற்றது.
பேரணியின் இறுதியில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதாகவும் இதற்கு எதிராக சகல முஸ்லிம்களும் பிராத்திக்குமாறும் பள்ளிவாயலின் இமாம் மௌலவி அஸ்பர் பதுர்தீன் வேண்டுகோள் விடுத்தார்.

நபிகள் நாயகத்தையும், இஸ்லாத்தையும் நிந்திக்கும் திரைப்பட சூத்திரதாரிகளுக்கு பலத்த கண்டனம்! -ரவூப் ஹக்கீம்-



நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களை மிகவும் கீழ்தரமாக சித்திரிப்பதோடு இஸ்லாத்தை அவமதிக்கும் ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ என்ற அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தையும் அதன் சூத்திரதாரிகளையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகத்தையும், இஸ்லாத்தையும் நிந்திக்கும் பிரஸ்தாப அமெரிக்க திரைப்படத்தின் முன்னோட்டத்தை தாம் இணையத்தளத்தில் பார்வையிட்டதாகவும், அதில் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வேடந்தரித்து நடிப்பவர் ஒழுக்க மாண்புகளில் அக்கறையற்ற விரச உணர்வை தூண்டக்கூடியவராக பெண்கள் மத்தியில் நடந்து கொள்வதாக அருவருப்பாக காண்பிக்கப்படுவதை அறவே சகித்துக்கொள்ள முடியாததாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டும் அமைச்சர் ஹக்கீம், பலத்த கண்டனத்திற்குரிய இத் திரைப்படம் மத்திய கிழக்கு அரபு நாடுகளிலும் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிலும் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பலைகளையும், ஆர்ப்பாட்டங்களையும் ஏற்கனவே தோற்றுவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாத்தையும் நபிகள் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களையும் நிந்திக்கும் கேலிச்சித்திரங்கள் டென்மார்க் போன்ற நாடுகளில் வரையப்பட்ட போது அதன் பாரதூரமான பிரதிபலிப்பு உலகளாவிய முஸ்லிம் சமுதாயத்தினரை கொதித்தெழச் செய்து பலத்த கண்டனத்தையும், எதிர்ப்பையும் பரவலாக ஏற்படுத்தியது போல அமெரிக்கர்களும் இஸ்லாத்தின் ஜென்ம விரோதிகளான இஸ்ரேலியர்களும் கூட்டாக தயாரித்துள்ளதாக கூறப்படும் இந்த கீழ்தரமான திரைப்படமும் முஸ்லிம்களின் மன உணர்வுகளை வெகுவாக பாதித்து, அவர்களை கிளர்ந்தெழச் செய்துள்ளது நியாயமானதே என்றும் அமைச்சர் ஹக்கீம் தமது அறிக்கையில் மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.
இஸ்லாம் உலகின் மாபெரும் சக்தியாக உருவாகிவருவதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள மேற்குலக நாடுகள் காழ்புணர்ச்சியின் காரணமாக இஸ்லாத்தையும், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும் நிந்திக்கும் விதத்தில் மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் அதன் விளைவு மிகவும் பாரதூரமானதாக இருக்குமென்றும் அமைச்சர் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம் முதலைமைச்ச்சரை அடைவதற்கான களமாக கிழக்கு மிளிர்கிறது; தலைவர்கள் சாதிப்பார்களா?


-ஷாமில் முஹம்மட்-
கிழக்கு மாகாணத்துக்கு ஒரு முஸ்லிம் முதலமைச்சரை நியமிக்க தேவையான பெரும்பாலான எல்லா அனுகூலங்களையும் கிழக்கு மாகாண சபை இன்று பெற்றுவருகிறது. இன்று கிழக்கில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 42 வீதத்தையும் தாண்டியுள்ளதாக தகவல்கள் கூறுகிறது .
அதை வெளிக்காட்டும் விதமாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகம் கூடிய மாகாண சபை பிரதிநிதித்துவத்தை பெற்றுகொண்டுள்ள சமூகமாக உருவாகியுள்ளது. மொத்தமாக 15 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
முஸ்லிம்களின் வாக்குகள் பிரிக்கப்படாமல், சிதறடிக்கப்படாமல், வாக்களிப்பு வீதமும் அதிகரித்த நிலையில் தமிழர் தரப்பு போன்று ஒரே கட்சியை நோக்கி முஸ்லிம்வாக்குகள் பயன்படுத்தப் பட்டிருக்குமாக இருந்தால் முஸ்லிம் சமூகம் மேலும் மூன்று பிரதிநிதிகளை பெற்றிருக்கலாம். எனினும் கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகள்தான் பெரும்பான்மயாக தெரிவாகியுள்ளார்கள் .
இன்று கிழக்கில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் போனஸ் ஆசனங்கள் இல்லாமல் கிழக்கில் 07 முஸ்லிம் பிரதிநிதிகளை பெற்றுள்ளது . இந்த வகையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட மாகாணத்தில் வெற்றிபெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பெரும்பான்மை முஸ்லிம் பிரதிநிதிகளை பெற்றுள்ளது .இதை இன்னொரு வகையில் சொல்வதனால் கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபின் பலம் முஸ்லிம் வாகாளர்கள் மீதுதான் தங்கியுள்ளது .
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் தனி ஒரு கட்சியாக போட்டியிட்டு ஏழு ஆசனங்களை கைப்பற்றி பேரம் பேசும் சக்தியாக உருவாகியுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைத்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த நிபந்தனைகளுடனான உடன்பாடு ஏற்பட்டால் கிழக்கு மாகாணத்தில் ஆளும் தரப்பு 14 முஸ்லிம் பிரதிநிதிகளை கொண்டதாக விளங்கும் .
இது இரண்டு வகையான பெரும்பான்மையை காட்டும். ஒன்று ஆளும், எதிர் தரப்புக்களை கொண்ட கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதிகள்தான் பெரும்பான்மை என்பதையும், ஆளும் தரப்பு என்று வரும்போதும் முஸ்லிம் பிரதிநிதிகள்தான் பெரும்பான்மை என்பதையும் காட்டும். இது முஸ்லிம்கள் இம்மாகாணத்தின் பெரும்பான்மை என்பதற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமையும். இவைகள் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்ள நியாயமான காரணிகளாக தொழில்படும் .
மறுபுறம் முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணையும்போது தமது கட்சிக்கு முஸ்லிம் முதலமைச்சர் பதவியையும் ஒரு நிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என்று அக்கட்சியின் அதிஉயர் பீடத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது . இதுவும் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப் பட ஏதுவாக அமையும்
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைத்து போட்டியிட்டு கிழக்கில் மூன்று உறுப்பினர்களை பெற்றுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டகளப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள முன்னாள் அமைச்சர் அமீர் அலியை முதலமைச்சராக நியமிக்குமாறு ஜனாதிபதியை கோருவோம் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் .கிழக்கு மாகாண தேர்தலின் பின்னர் முன்னாள் அமைச்சர் அமீர் அலியை முதலமைச்சராக நியமிக்குமாறு நாம் கோருவோம் என்றும் நான் இனவாத கருத்தை முன்வைக்க தயாராக இல்லை , ஆனால் மாகாணங்கள் என்றுவரும்போது கிழக்கில் 42 வீதம் முஸ்லிம்கள் வாழ்வாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டுமே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக முடியும். அதை நாங்கள் ஜனாதிபதியிடம் கோருவோம்.
வடக்கை பொறுத்தவரை அங்கு எதிர்காலத்தில் ஒரு தமிழர் ஒருவர் எப்படியும் முதலமைச்சராக வரப்போகிறார் . நாட்டின் ஏனைய 7 மாகாணங்களில் சிங்கள முதலமைச்சர்கள் இருகின்றார்கள் , கிழக்கில் ஏற்கனவே ஒரு தமிழர் முதலமைச்சராக இருந்துள்ளார். அங்கு சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வருவது பொருத்தமற்றது அந்த வகையில் இந்த முறை முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பது தவறானது அல்லஎன்று ஏற்கனவே தெரிவித்துள்ளார் .
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைத்து போட்டியிட்டு கிழக்கில் மூன்று உறுப்பினர்களை பெற்றுள்ள அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் தற்போது எதையும் பேசாவிட்டாலும் இன்று உருவாகிவரும் சூழ்நிலையில் முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கைகளுக்கு தடையாக இருக்காது என்று நம்பலாம் .
கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் தேசிய காங்கிரசும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசும் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று செல்லப்படுகிறது அதற்கு அமைவாக தேசிய காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாட்டை ஆதரிக்கலாம் அதனால் தேசிய காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பக்கம் நின்று கூட்டாக அமீர் அலியை நியமிக்குமாறு கோரலாம். இப்படி உருவாகிவரும் முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக்கொள்ள ஏதுவான காரணிகள் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுகொடுக்கும் என்று எண்ணத் தூண்டுகிறது .
தற்போது முஸ்லிம் முதலமைச்சருக்கான சாதகமான நிலை தோன்றியுள்ளதால் அவர் எந்த கட்சியை சார்ந்தவர் என்பதும் அவர் யார் என்பதும் அடுத்த சிக்கலை ஏற்படுத்தலாம். நியமனமாகும் முதலமைச்சர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை சார்ந்தவரா ? அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சார்ந்தவரா ? அல்லது நேரடியாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சார்ந்தவரா ? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது . அப்படி நியமிக்கப்படுபவர் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு பதவி வகிப்பாரா ? அல்லது சுழற்சி முறையில் நியமனம் பெறுவாரா ?என்பதையும் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் .
முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும்  , மாகாண, மாவட்ட ரீதியில் அரசியல் செல்வாக்குடன்  பதவிகளை வைத்துகொண்டு இருக்கும் அரசியல்வாதிகளும் முதலமைச்சர் என்று ஒருவர் புதிதாக தமக்கு சவாலாக உருவாகுவதை   ஏற்றுகொள்ள மாட்டார்கள் ஆனாலும் அவர்கள் இன்று பல உட்கட்சி அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரியவருகிறது. அதனால் செல்வாக்குள்ள சக்திகளுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அழுத்தங்களுக்கு உட்பட்டு முதலமைச்சர் ஒருவரை தமது தரப்பில் கோரவேண்டிய நிலையில் உள்ளனர் என்பதுடன் அந்த சவாலை சுழற்சி முறை முதலமைச்சர் என்பதை ஏற்றுகொண்டு சமநிலைப்படுத்தவும் முற்படலாம்.
தற்போது உருவாக்கி வரும் அரசியல் சூழ்நிலை முஸ்லிம் முதலமைச்சர் கனவு நிஜமாக்கும் என்றுதான் சொல்கிறது . அடுத்து முதலமைச்சருக்கான அதிகாரம் ,அவரின் சுதந்திரமான செயலாக்கம் ,அதன் மீதான கட்டுபாடுகள், மாகாண சபைக்கு முன்மொழியப்பட்டுள்ள அதிகாரங்கள் அதை சுதந்திரமாக செயலபடுத்த ஏதுவான வழிமுறைகள் என்பன தொடர்பில் நிறையவே ஆராயப்படவேண்டியுள்ளது.

site counter