அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தம்புள்ளை பிரதி மேயர் கைது



100,000 ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் தம்புள்ளை மாநகரசபையின் பிரதி மேயர் (ஐ.ம.சு.கூ) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் அவரிடம் தற்போது விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இவர் இலஞ்சம் வாங்கியதற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.(மகேஷ் கீர்த்திரட்ன)

புதிய மதுபானசாலை மீண்டும் திறப்பதைக் கண்டித்து ஆரையம்பதியில் பாரிய ஆர்ப்பாட்டம்




By Farhan
2012-10-05

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு (வேடர்குடியிருப்பு ) பிரதேசத்தில்; முடக்கொடிப் பகுதியில் கடந்த வருடம் திறக்க இருந்த புதிய மதுபானசாலை மீண்டும் திறப்பதைக் கண்டித்து இன்று காலை மட்டு-கல்முனை ஆரையம்பதி பிரதான வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சுமார் 9500 குடும்பங்களையும் 32000 அங்கத்தவர்களையும் 21 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் கொண்டுள்ள மண்முனைப்பற்று பிரதேசத்தில் ஏற்கனவே ஐந்து மதுபானசாலைகள் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் புதிய மதுபானசாலையைத் திறந்து வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் காரியத்துக்குத் துணைபோக வேண்டாம், எமது மக்கள் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மதுப்பாவனையால் ஒரு கிராமசேவையாளர் பிரிவில் சராசரியாக 75 பேர்வரை கணவன் விட்டுச்சென்ற பெண்கள் வாழ்கின்றார்கள்.

இதனால் நாளாந்தம் மதுவுக்கு அடிமையாகி சமூக ,பொருளாதார ,கலாசார சீரழிவுகள் அதிகரித்த வண்ணமே உள்ளது .இவ்வாறான நிலையில் இன்னுமோர் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கி வரலாற்றுத் துரோகத்தை இழைக்காதீர், எமது பிரதேச மாணவர்களின் கல்விச் சீரழிவுக்கு வித்திடாதீர் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.



பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயார்: எஸ்.பீ


(ஒலிந்தி ஜயசுந்தர) 

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு சமமான தரத்தில் உள்நாட்டு பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்வதற்காக 1978ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கா தெரிவித்தார்.

எமது பல்கலைக்கழகங்களைப் பற்றியும் கல்விச் சீர்த்திருத்தத்தில் அரசாங்கத்தின் வகிபாகம் பற்றியும் பாதகமான அறிக்கைகள் அண்மையில் வந்துள்ள போதிலும் கல்வி முறைமையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான தெளிவான தொலைநோக்கு அரசாங்கத்துக்கு உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சிமன்றங்கள், மீன்பிடி அமைச்சு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, சுகாதார அமைச்சு என்பவையும் கல்வி மீது செலவு செய்வதனால் இலங்கையில் கல்விக்கான ஒதுக்கீடு ஐந்து சதவீதத்திலும் கூடுதலானது என கல்வி அமைச்சர் மேலும் கூறினார். 

இரண்டரை வருடங்களுக்கு முன் காணாமல்போன 10 வயது சிறுமி கண்டுபிடிப்பு



பதுரளிய பிரதேசத்திலிருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன 10 வயது சிறுமியொருவர் நேற்று வியாழக்கிழமை குருவிட்ட பிரதேசத்தில் சந்தேகநபரொருவரால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் குறித்த சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரத்தினபுரி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமியை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைத் தேடிக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

உயர்ஸ்தானிகராலயம் தாக்கப்பட்டமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் பங்களாதேஷ் அதிருப்தி


(றிப்தி அலி)

பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் உயர்ஸ்தானிகராலயம் நேற்று வியாழக்கிழமை தாக்கப்பட்டமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது என கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கோனிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டம் நடத்துவது இலங்கையர்களின் உரிமையாகும். எனினும் உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தியமையை ஏற்றுக்கொள்ள முடியாது என பேச்சாளர் குறிப்பிட்டார்.

பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் உயர்ஸ்தானிகராலயம் தாக்கப்பட்டமை தொடர்பில் பங்களாதேஷ் அரசாங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முஹம்மட் சபியூர் ரஹ்மானை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து முறையிடவுள்ளதாக உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

அரசுக்கு எதிராக ஐக்கிய எதிர்க் கூட்டணி உருவாக்கப்படும்: சரத் பொன்சேகா



அரசாங்கத்துக்கு எதிராக மிக விரைவில் ஒன்றுபட்ட ஐக்கிய எதிர்க் கூட்டணியொன்று உருவாக்கப்படும் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். இந்த கூட்டணிக் கட்சியின் தொடக்கப் பேரணி எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த ரங்கே பண்டார, பாலித்த தேவப்பெரும, தயாசிறி ஜயசேகர, மாகாணசபை உறுப்பினர் சிறிலால் லக்திலக்க மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோர் இந்த கூட்டணியில் இணைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

அத்துடன், முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா மற்றும் மாதுலுவாவே சோபித்த தேரர் ஆகியோரும் அரசாங்கத்தைத் தோற்கடிக்கும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளனர் என்று சரத் பொன்சேகா மேலும் கூறினார். 

நான்காவது இறுதிப் போட்டி குறித்து பெருமையடைகிறோம்: மஹேல



இலங்கை அணி அண்மைக்காலத்தில் நான்காவது உலகக் கிண்ணமொன்றின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளமை தொடர்பாகப் பெருமையடைவதாக இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

அணியிலுள்ள அனைவரும் இந்தப் பெருமையான உணர்வைக் கொண்டிருப்பதாகவும் மஹேல ஜெயவர்தன தெரிவித்தார்.

இலங்கை அணி மஹேல ஜெயவர்தனவின் தலைமையில் 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டிகள், 2009ஆம் ஆண்டு உலக டுவென்டி டுவென்டி உலகத் தொடர் ஆகியவற்றிற்குத் தகுதிபெற்றிருந்ததோடு, 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு குமார் சங்கக்காரவின் தலைமையில் தகுதிபெற்றிருந்தது.
தற்போது இலங்கை அணி நான்காவது உலகத் தொடரொன்றின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, வெற்றிகரமான குழுவொன்றின் அங்கமாகக் காணப்படுவதில் இலங்கை வீரர்கள் அனைவரும் பெருமையடைவதாகவும், இதுவரை உலகக்கிண்ணமொன்றை வெற்றிகொள்ளாத போதிலும், நான்கு இறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளமை குறித்துப் பெருமையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

நான்கு இறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றமை ஆச்சரியமானது எனத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, ஒரு வீரரின் காலத்தின் ஓர் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதே அதிர்ஷ்டகரமானது எனத் தெரிவித்தார்.

இலங்கை அணி இதுவரை பங்குபற்றிய 3 இறுதிப் போட்டிகளில் ஒன்று பார்படோஸிலும், ஒன்று இங்கிலாந்திலும், ஒன்று மும்பையிலும் இடம்பெற்றிருந்த நிலையில், முதன்முறையாக இலங்கையில் ஓர் இறுதிப் போட்டியில் பங்குபெறவுள்ள நிலையில் இந்த இறுதிப் போட்டியை வித்தியாசமான முறையில் எதிர்கொள்ள எதிர்பார்ப்பதாக மஹேல ஜெயவர்தன தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானிடம் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போது அன்ஜலோ மத்தியூஸ், அஜந்த மென்டிஸ் ஆகியோர் இளைய வீரர்களாகக் காணப்பட்டார்கள் எனத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, தற்போது அணியிலுள்ள அனைவரும் அதிகமான டுவென்டி டுவென்டி போட்டிகளில் பங்குபற்றியுள்ள நிலையில் இறுதிப் போட்டி குறித்து எதிர்பார்ப்புகளுடன் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

site counter