அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

காவல்துறையினர் ஜனாதிபதி குடும்பத்தின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக மாறியுள்ளனர்; மங்கள குற்றச்சாட்டு!


நிறைவேற்று அதிகாரத்தினால் நீதிமன்றக் கட்டமைப்பு மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீதான தாக்குதல் நாட்டின் சட்டம் ஒழுங்கின் மீதான தாக்குதலாகக் கருதப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் சர்வாதிகாரத்தை முன்னெடுக்க இந்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
காவல்துறையினர் ஜனாதிபதி குடும்பத்தின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக மாறியுள்ளனர்.
நீதிமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை நாட்டின் ஜனநாயகத்தின் மீது பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.
நீதிமன்றக் கட்டமைப்பின் மீதான அரசியல் தலையீடுகளுக்கு நீதிமன்றக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் காரணம்.
அரசியல் தலையீடுகளை எதிர்க்கக் கூடிய வல்லமை நீதிமன்றக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு இருக்க வேண்டுமெனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மட்டு தமிழ் இளைஞன் கட்டாரில் கொலை; தோழர்கள நால்வர் கைது!


கட்டாரில் சாரதியாக தொழில் புரிந்து வந்த மட்டக்களப்பு, மண்முனைப்பற்று, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 28 வயதுடைய திருச்செல்வம் கிருஸ்ணபிள்ளை என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.
இதனை கட்டார் அரசாங்கம் உறுதி செய்துள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கத்தினூடாக குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கட்டார் பொலிஸ் தெரிவித்துள்ளது.
குறித்த இளைஞரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அவரது அதே ஊரான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நால்வரை கட்டார் பொலிசார் கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த இளைஞர் தாக்கப்பட்டு இறந்ததாகவும் உடனடி விசாரனைகளின் பின் அறிவிக்கப்பட்டுள்ளது.

குர்பான் கடமையை நிறைவேற்ற தடைகள் இருக்காது

ACJU Logoஇந்த முறை குர்பான் கடமையை நிறைவேற்ற தடைகள் ஏற்படுத்தப்படும் என்ற அச்ச உணர்வு தொடர்பாக கருத்துரைத்துள்ள அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் துணைச் செயலாளர் தாஸீம் மௌலவி, இந்த முறையும் கடந்த முறைகள் போன்று குர்பான் கடமையை நிறைவேற்ற தடைகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் .
அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, பாதுகாப்பு செயலாளருடன் இது தொடர்பாக பேசியுள்ளார். குர்பானுக்கு பாதகம் ஏற்படாதவிதமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடலாம் என்றும் தாஸீம் மௌலவி தெரிவித்துள்ளார்.

சாராயம் வாங்கச் சென்ற முதியவர் மதுச்சாலைக்குள்ளேயே விழுந்து மரணம்!



Dead Suddenஏ.எச்.ஏ. ஹுஸைன்: 
மதுச்சாலையில் சாராயம் வாங்கச் சென்றவர் அந்த இடத்திலேயே விழுந்து மரணடைந்த சம்பவம் நேற்று  ஞாயிற்று கிழமை  பிற்பகல் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் தகவல் தெரிவிக்கையில், ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை வாசியான 66 வயதுடைய பொன்னையா பிரான்ஸிஸ் தங்கத்துரை என்பவர், சாராயம் வாங்குவதற்காக சத்துருக்கொண்டானிலுள்ள மதுச்சாலைக்குச் சென்று, மது வாங்கி அதனை எடுத்துக் கொண்டு திரும்பும்போது, மதுச்சாலைக்குள்ளேயே விழுந்து மரணித்து விட்டதாகவும், பின்னர் உறவினர்கள் அவரது சடலத்தை தன்னாமுனையிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வந்து விட்டதாகவும் கேள்விப்பட்டு தாங்கள் ஸ்தலத்திற்குச் சென்றதாகத் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற மதுச்சாலை அமைந்துள்ள சத்துருக்கொண்டான் பகுதி, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குள் உள்ளடங்குவதால் மேலதிக விசாரணை மட்டக்களப்பு பொலிசாருக்குப் பாரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிறுகுற்றப்பிரிவு பொறுப்பதிகாரி காமினி ஜெயவர்த்தன மற்றும் பொலிஸ் சார்ஜன் கே. விக்னராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஸ்தலத்திற்குச் சென்று விசாரித்தனர்.
பிரேத பரிசோதனை மரண விசாரணைக்காக, சடலம் தற்பொழுது மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. மட்டக்களப்புப் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இறந்தவர் மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப் அவர்களின் சகோதரர் என்று கூறப்படுகின்றது.

site counter