க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் குதிரை ஓடிய ஒருவர் நேற்று அம்பிலிபிட்டிய துன்கம மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
நேற்றுக்காலை 9.15 மணியளவில் பரீட்சைத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின்படி மேற்படி பரீட்சை மண்டபத்தில் அடையாள அட்டையில் பெயர் மாற்றம் செய்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்த நபர் நேற்றுக் காலை 10.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பரீட்சை மோசடியில் ஈடுபட்ட நபர் உடனடியாக குட்டிகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த பரீட்சாத்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சிலவேளை குறித்த பரீட்சார்த்திக்கு ஆயுள் முழுவதும் எதுவித பரீட்சைக்கும் தோற்ற முடியாதவாறு தடைசெய்யப்படலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது.