(அஸ்லம் எஸ்.மௌலானா)
நபி (ஸல்) அவர்களின் வாழ்வியலை பின்பற்றி, ஏனைய மதத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வதன் மூலமே சிங்கள இனவாதிகளின் நெருக்கடிகளில் இருந்து முஸ்லிம்கள் விடுபட முடியும் என்று திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளருமான பைசால் காசிம் தெரிவித்தார்.
கல்முனை வலய மீலாதுன் நபி பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பைசால் காசிம் எம்.பி. இதனைக் குறிப்பிட்டார்.
2012ம் ஆண்டின் தேசிய மீலாதுன் விழா போட்டியில் தேசிய ரீதியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலயில் நடைபெற்றது.
கல்முனை கல்வி வலயப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவதில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;
"முஸ்லிம்களாகிய நாம் இந்நாட்டில் தற்பொழுது மிகவும் சிக்கலான கால கட்டத்தில் உள்ளோம், சிங்கள இனவாத குழுக்கள் எம்மை வீண் பிரச்சினைக்குள் இட்டுச் செல்ல காரணம் தேடி அலைகின்றன. எம்மீது பல குற்றச் சாட்டுக்களை சுமத்தி நெருக்கடி கொடுத்து வருகின்ற சிங்கள இனவாதிகள், சமூக, கலாசார ரீதியாக எம்மை நசுக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வியலை பின்பற்றுவதிலும் ஏனைய மதத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வதும் கல்வி ரீதியாக பலம் மிக்கவர்களாக மாறுவதும் மிக அவசியமாகும்.
குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள் கலாச்சார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் தங்களை வளர்த்துக் கொள்வது காலத்தின் தேவையாகும்" என்றும் குறிப்பிட்டார்.