சண்டே லீடர் பத்திகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பெற்றிக்கா ஜேன்ஸுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து செய்திகளை பிரசுரித்தார் என்ற குற்றச்சாட்டில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பெற்றிக்கா ஜேன்ஸ் நீதிமன்றில் ஆஜராகாததை அடுத்தே மேன்முறையீட்டு நீதியரசர் பிடியாணை பிறப்பித்து வழக்கை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அதேவேளை தனக்கு நாட்டில் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து அவர் தனது பிள்ளைகளுடன் லண்டனில் தஞ்சம் கோரியிருப்பதாக கூறப்படுகிறது.
சண்டே லீடர் ஆசிரியர் பெட்ரிக்கா ஜேன்ஸ் வெளிநாட்டில் தஞ்சம்!
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பெட்ரிக்கா ஜேன்ஸ் வெளிநாடொன்றில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமது இரண்டு மகன்மாருடன் ஜேன்ஸ் அண்மையில் புகலிடம் பெற்றுக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதிகளவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட காரணத்தினால் ஜேன்ஸ் நாட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெட்ரிக்காவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கடவுச் சீட்டை நீதிமன்றம் பெற்றுக் கொள்வதுடன் சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்து வரும் பலம பொருந்திய நாடொன்றில் பெட்ரிக்கா புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், எந்த நாட்டில் பெட்ரிக்கா அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இவருக்கு எதிராக பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலஆகியோர் தாக்கல் செய்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ள நிலையிலேயே இவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
சரத் பொன்சேகாவின் வெள்ளைக் கொடி வழக்கில் இவர் பிரதான பாத்திரம் வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக