அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 9 ஜனவரி, 2013

முஸ்லிம்கள் தமது அரசியல் தலைமைகளையிட்டு விழித்துக் கொள்ள வேண்டும்..!


(எஸ்.றிபான்)

2013.01.08 ஆம் திகதி (நேற்று) திவிநெகும சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 107 பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அசாங்கத்துடன் பங்காளிகளாக உள்ள சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

திவிநெகும சட்ட மூலத்திற்கு வாக்களித்துள்ளதன் மூலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது இரட்டை வேசத்தை மீண்டுமொரு தடவை நிரூபித்துள்ளது.

திவிநெகும சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள். இவ்வாக்களிப்பு விடயத்தில் கிழக்கு மாகாண சபையின் மு.காவின் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் முக்கிய பங்கு வகித்திருந்தார். இதன் போது அவர் பெரும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டார்.

இச்சட்ட மூலத்திற்கு கிழக்கு மாகாண சபையில் உள்ள மு.காவின் உறுப்பினர்கள் கட்சியுடன் கலந்து பேசவில்லை என்று தெரிவிக்கபட்டு விசாரணைகளும் மேற் கொள்ளப்பட்டன. 

விசாரணைகள் மேற் கொள்ளப்பட்ட போதிலும், அவ்விசாரணை பற்றிய விபரம் இது வரை வெளியிடப்படவில்லை. இவ்விசாரணை ஒரு கண் துடைப்பு என்றும், மக்களின் விமர்சனங்களுக்கு தற்காலிகமானதொரு போர்வையாகவே மு.கா விசாரணை மேற் கொண்டு வருகின்றதென அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள். 

மேலும், பாராளுமன்றத்தில் இச்சட்ட மூலம் வாக்களிப்புக்கு வரும் போது மு.கா ஆதரவாக வாக்களிக்குமென்று நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

இதே வேளை, மு.காவின் தலைவர் ரவூப்ஹக்கிம் கடந்த 2012.10.22ஆம் திகதி இரவு சம்மாந்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் 'கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தது சேதாரமற்ற விட்டுக் கொடுப்பு. ஆனால், திவிநெகும சட்டத்திற்கான விட்டுக் கொடுப்பு சேதாரமான விட்டுக் கொடுப்பாகும். ஆனால், கட்சியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காவே ஆதரவாக வாக்களிக்பட்டுள்ளது.' என்று தெரிவித்து இருந்தார்.

கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தை கட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக என்று மு.கா தமது புளித்துப் போன காரணத்தை முன் வைத்தது. தற்போது திவிநெகும சட்ட மூலத்தில் மு.கா 14 திருத்தங்களை முன் வைத்ததாகவும், அதற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்ததாகவும் அதனால்தான் பாராளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்ததாக மு.கா தெரிவித்துள்ளது.

திவிநெகும சட்ட மூலத்தில் 14 திருத்தங்களை மு.கா முன் வைத்தது உண்மையாயின் அதனை வெளிப்படுத்தல் வேண்டும். ஆனால், இப்பத்தி எழுதும் வரை மு.கா அந்த 14 திருத்தங்களையும் வெளியிடவில்லை.

2012.12.29ஆம் திகதி நடைபெறற் மு.காவின் 24வது பேராளர் மாநாட்டில் மாகாண சபை முறையையும், அதன் அதிகாரங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானம் எடுத்து விட்டு, அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்பது நாட்கள் கழிந்த நிலையில் மு.கா மாகாண சபையின் அதிகாரங்களில் பலவற்றை மத்திய அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளும் திவிநெகும சட்ட மூலத்திற்கு பாராளுமன்றத்தில் கைகளை உயர்த்தியன் மூலமாக மு.கா மீண்டுமொரு தடவை கொள்கைப் பிறழ்வு வேலையை கச்சிதமாக செய்துள்ளது. 

கிழக்கு மாகாண சபையில் மு.காவின் உறுப்பினர்கள் திவிநெகும சடட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முன்னதாக மேல்மாகாண சபையில் உள்ள மு.காவின் உறுப்பினர்கள் திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த போது, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தவி;ல்லை. இதன் மூலமாக கிழக்கு மாகாண முஸ்லிம்களையும், கட்சியின் ஆதரவாளர்களையும் ஏமாற்றுவதற்காகவே மு.கா கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை விசாரணை செய்தது. பாராளுமன்றத்தில் திவிநெகுமவிற்கு ஆதரவாக வாக்களித்தள்ளதனால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மீது மேற் கொண்ட விசாரணை ஒரு போலியாகவே இருக்க வேண்டுமென்று அக்கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மு.கா என்ன நடந்தாலும் அரசாங்கத்தை விட்டு விலகாது என்பது உண்மையாகும். ஆதலால், அரசாங்கம் கொண்டு வரும் எதற்கும் கண்களை மூடிக் கொண்டு ஆதரவு வழங்கவே செய்யும். தேர்தல் வரும் போது, காட்டமான முறையில் அரசாங்கத்தையும், பேரினவாதிகளையும் தாக்கிப் பேசி, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களின் கதைகளையும், இஸ்லாத்ததையும் பாதுகாத்துக் கொள்ளும் கருமவீரர்களாக தங்களை காட்டிக் கொண்டால் முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பி;க்கையில்தான் மு.கா தாம் நினைத்தவாரெல்லாம் முடிவுகளை எடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அரசாங்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும் அனைத்தையும் கமிஷனுக்கு விலை பேசுகின்றவர்களாக மு.காவின் மக்கள் பிரதிநிதிகள் இருப்பதனால், அவர்கள் தங்களது கமிஷனை அதிகரித்துக் கொள்வதற்கு திவிநெகும சட்டத்திற்கு மட்டுமன்றி, பள்ளிவாசல்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முஸ்லிம் விரோத சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், அதற்கும் வாக்களிப்பார்கள்.

பல்வேறு சர்ச்சைக்குரிய 18வது சீர்திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து விட்டு. அதனை தமது வரலாற்றுத் துரோகமான முடிவு என்று மக்கள் மத்தியில் வெட்டமின்றி கருத்தக்களை முன் வைக்கும் மு.கா திவிநெகும சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை ஒன்றும் ஆச்சரியமான ஒன்றல்ல.

சிறுபான்மையினரிடையே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் அஸ்ரப்பின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் அதிக தடவைகள் கூறியுள்ள மு.கா சிறுபான்மையினருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று கூறுவதற்கும், அஸ்ரப்பின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் கூறுவதற்கும் தகுதியறற்தொரு கட்சியாக மு.கா இருக்கின்றது.

மாகாண சபைகளின் அதிகாரங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு ஈற்றில் மாகாண சபை முறையும் இல்லாமல் போய்விடும். மாகாண சபை முறையை இல்லாமல் செய்வதற்கான காரியங்களில் ஒன்றுதான் திவிநெகும சட்ட மூலம் என்பதனை மு.காவினால் பரிந்து கொள்ள முடியாது இருப்பது அக்கட்சியின் அரசியல் சூனியத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். அதே வேளை, அக்கட்சியின் கொள்கைளில் ஏறபட்டுள்ள மாற்றங்களையும் தெளிவுபடுத்துவதாக இருக்கின்றது.

திவிநெகும சட்ட மூலத்திற்கு மு.கா எதிராக வாக்களித்தாலும் குறிப்பிட்ட சட்ட மூலம் நிறைவேற்றப்படும். ஆதலால், மு.காவின் எதிர்ப்பு பிரயோசனமற்றதாக மாறிவிடுமென்ற கருத்தையும் மு.காவினர் முன் வைத்துள்ளனர். இக்கருத்;து சிறு பிள்ளைத்தனமான ஒன்றாகும். மு.கா எதிர் கட்சியில் இருந்த போது வரவு-செலவு திட்டங்களுக்கு எதிர்த்து வாக்களித்துள்ளது. ஆயினும் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாங்கள் எதிர்த்து வாக்களித்தாலும், வரவு-செலவு திட்டத்தை தோற்கடிக்க முடியாதென்று தெரிந்து இருந்தும் வாக்களித்துள்ள, நிலையில் திவிநெகும சட்ட மூலத்திற்கு மு.கா எதிராக வாக்களித்தாலும் குறிப்பிட்ட சட்ட மூலம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருப்பதானது, மக்களை பிழையாக தங்களின் இஸ்டத்திற்கு அமைய வழி நடத்தும் செயலாகும்.

குறிப்பிட்ட சட்ட மூலம் நிறைவேற்றப்படுகின்றதா அல்லது நிறைவேற்றப்படாமல் போகின்றதா என்பது முக்கியமல்ல. நாம் என்ன கொள்கையை முன் வைத்தோம் என்பதுதான் முக்கியமாகும்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வாக முன் வைக்கப்படும் தீர்வு மாகாண சபை முறையை மேலும், விரிவாக்குவதாக இருக்க வேண்டுமென்று தெரிவிக்கபட்டு வரும் கருத்தக்களுடன் உடன்படான கருத்துக்களை முன் வைத்த மு.கா மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கச் செய்யும் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையானது, தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் மு.காவிற்கு அக்கரையில்லை என்பதாக இருக்கின்றது. 

இதே வேளை, தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸூம் திவிநெகும சட்ட மூலத்திற்கு எதிர் பார்த்தபடி ஆதரவாக வாக்களித்துள்ளன.

அரசாங்கத்துடன் இணைந்து இருப்பதில் முஸ்லிம் கட்சிகளிடையே காணப்படும் போட்டி காரணமாகவே அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்ககைகளையும் முஸ்லிம் கட்சிகள் ஆதரித்துக் கொண்டிருக்கின்றன.

மு.கா, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளை வைத்தே அரசியல் செய்து கொண்டிருக்னிறன. ஆனால், இக்கட்சிகள் தேர்தல் முடிந்ததும் முஸ்லிமகளை மறந்து ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தும் செயல்களிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் இக்கட்சிகள் முஸ்லிம்களுக்குரிய எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. முஸ்லிம்களின் காணிகளும், மத உரிமைகளும் பிறவும் பறி போய்க் கொண்டிருப்பதனை கைகளைக் கட்டிக் கொண்டு பார்த்திருக்கின்றவைகளாகவே இருக்கின்றன. முஸ்லிம்கள் இழப்புக்களை சந்தித்துக் கொண்ட ஒவ்வொரு தடவையும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவிகளும், பைகளும் உயர்வடைந்து கொண்டே வந்துள்ளன.

ஏமாறுகின்றவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஆதலால், முஸ்லிம்கள் தமது அரசியல் தலைமைகளையிட்டு விழித்துக் கொள்ள வேண்டும். விழித்துக் கொள்ளாத சமூகம், ஒரு போதும் வெளிச்சத்தை கண்டு கொள்ளாது.

Jaffna Muslim

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter