ரஷ்யாவின் முப்தி உடனும் அங்கு வாழும் முஸ்லிம் அறிஞர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், தம்மைச் சந்தித்த அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அலெக்சாண்டர் ஏ.கர்ச்சாவாவிடம் கோரிக்கை விடுத்தார்.
அண்மையில் இங்கு பதவியேற்றுள்ள இலங்கைக்கும் மாலைதீவுக்குமான ரஷ்யத் தூதுவர் கர்ச்சாவா, அமைச்சர் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான உரையாடல் நீதியமைச்சில் நடைபெற்றபொழுது, ரஷ்யாவில் 20 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாக கூறினார். அத்துடன் இலங்கை முஸ்லிம்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவதற்கும் உதவிகளை வழங்குவதற்கும் அவர்கள் முன்வருவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ராஜதந்திர நல்லுறவு 60 ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கைக்கு ரஷ்யா ஆதரவு வழங்கியதாகவும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
அடுத்த ஆண்டு பிரஸ்தாப மனித உரிமைகள் மன்றத்தில் ரஷ்யா இடம்பெறாத போதிலும் இலங்கைக்கான ஒத்துழைப்பு தொடரும் என்று தூதுவர் கூறினார்.
கொழும்பு 7, எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசல் புதிய ரஷ்ய தூதரக வளவை அண்மித்ததாக நிறுவப்பட்டிருப்பதால், தூதரகத்தின் புதிய கட்டிடம் அமையும் போது ஏற்படக் கூடிய நடைமுறை பிரச்சினை பற்றி தூதுவர் கூறியதோடு நகர அபிவிருத்தி அதிகார சபையோடு சம்பந்தப்பட்டதாக இருப்பதால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோடு தாம் அதுபற்றி கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் ரஷ்யத் தூதுவரும் தம்மிடம் இது பற்றி கூறியதாகவும், சமயம் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் உணர்வுபூர்வமாகவும் பொறுப்புணர்ச்சியோடும் அணுகப்பட வேண்டியது என்றும் அமைச்சர் ஹக்கீம் ரஷ்யத் தூதுவரிடம் வலியுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக