அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 10 ஆகஸ்ட், 2013

வியாழன் பெருநாளா...? நோன்பா...?

வியாழன் பெருநாளா...? நோன்பா...?

வியாழன் பெருநாளா...நோன்பா...முக்கால் நாளாக முஸ்லிம் சமுகம் கேட்டு ஓய்ந்த கேள்வி இது. புதன் மஃரிப் முதல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை விடையின்றித் தவித்த இக்கேள்விக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி முற்றுப்புள்ளி வைக்கிறார். அது ஒரு அருமையான விளக்கம். அந்த விளக்கத்தில் ஒரே ஒரு கேள்வியையும் ஒரு பத்வாவையும் தவிர அனைத்துக்கும் தெளிவான விடை இருந்தது. அவற்றை பின்னர் பார்போம்.

புதன் மஃரிப் முதல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை சுமார் முக்கால் நாள் முஸ்லிம் சமுகம் குட்டை குழம்பிய கதையாகியது. இதே போன்றதொரு பெருநாள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பும் சமூகத்தை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்தப் பெருநாள் இறுதியாக ஸஹர் நேரத்தில் அறிவிக்கப்பட்டதுதிடுதிப்பாக வந்த அந்தப் பெருநாளை முஸ்லிம் சமூகம் வெகு 'விமர்சனத்துடன்கொண்டாடியது. அன்றைய இரவு முழுவதும் தூங்காமல் சமூகத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த ஞாபகம் இன்னும் எனது நினைவை விட்டு அகலவில்லை.
'ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பே இறுதியானது அவர்களின் தீர்மானத்திற்கேற்ப செயற்படுங்கள்'என்ற வாசகத்தை ஒரு திக்ர் போல அன்றைய இரவு முழுவதும் உச்சரித்துக் கொண்டிருந்தேன் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் கூறுவதற்காக...
இம்முறை அதனை நான் செய்யவில்லை. காரணம் கள நிலைவரங்கள் திருப்திகரமான தகவல்களைத் தருவதாக இல்லை. குட்டை நன்றாகக் குழம்பியே இருந்தது. பலருடைய மனநிலையை அவதானிக்கும் போது ஜம்இய்யதுல் உலமாவுக்கு சார்பாக சிந்திக்கும் போக்கில் அவர்கள் இல்லை என்பது புரிந்தது. இந்நிலையில் ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பே இறுதியானதுஅதனை நடைமுறைப்படுத்துங்கள் என குழம்பிப் போயிருப்பவர்களுக்கு நான் கூற முற்பட்டால் இரவு முழுவதும் தொலைபேசி விவாதம் நடாத்த வேண்டி வந்திருக்கும். தற்செயலாக ஜம்இய்யதுல் உலமா விரும்பாத ஒரு வார்த்தை எனது நாவிலிருந்து  வெளிப்பட்டு விட்டாலோ இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஜம்இய்யதுல் உலமாவை விமர்சிக்கின்றது என்றுகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விழைபவர்களும் இல்லாது போக மாட்டார்கள்.
எனவே குழம்பிய சமூகத்தை உரியவர்களே கையாளட்டும் என்ற நோக்கில் நான் தொலைபேசி  இயக்கத்தை நிறுத்தி விட்டேன். பேசுவதின் மூலம் வருகின்ற தொல்லைகளை விட அமைதியாக இருப்பது குறித்து வரும் விமர்சனம் பாதிப்புக் குறைந்தது என்ற கணிப்போடு...
இருப்பினும் பெருநாளாநோன்பாஎன்ற குழப்பத்தில் சமூகம் அல்லோலகல்லோலப்பட்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது.
பல ஊர்கள் வியாழன் பெருநாள் கொண்டாடுவதாக தீர்மானித்து விட்டன. நோன்பு பிடிப்பது ஹராம் என்ற பத்வாக்கள் மின்னல் வேகத்தில் பரவியிருந்தன. விமர்சனங்களும் கேள்விக்கணைகளும் ஓய்வதாகத் தெரியவில்லை.
இவற்றையெல்லாம் சரிகண்ட நிலையில் நான் இதனை எழுதவில்லை. எனினும் சமூகத்தின் நிலை வியாழன் பிற்பகல் ஒரு மணிவரை இவ்வாறு தான் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதற்கு யார் காரணம்?
பக்கச்சார்போடு குறைகளை ஒருபக்கம் வைத்துப் பேசி விடாமல் படிப்பினை பெறும் நோக்கில் நடுநிலையாக சிந்தித்தால் நடந்துமுடிந்த குழப்பத்துக்கான பொறுப்பின் பங்குகளை உரியவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இனியும் இப்படியொரு குழப்பம் சமூகத்தில் வரக்கூடாது என்ற ரீதியில் இதுபற்றி சிந்திப்பது சமூகத்தின் பொறுப்பாளர்களது தார்மீகக் கடமையாகும்.
சமூகம் ஹலால் விடயத்தில் கட்டுப்பாடாக நடந்து கொண்டது யாவரும் அறிந்ததே. மிகச்சிலர் ஹலால் விடயத்தில் சிற்சில கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் அதனை வெளிக்காட்டி சமூகத்தைப் பிளவுபடுத்த முயலவில்லை.
எனினும் பிறை விடயத்தில் நிலைமை முற்றிலும் வேறுபட்டிருந்ததையே பார்க்கிறோம். அவ்வாறாயின் ஏன் அது நடந்தது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஹலால் இனவாதிகளால் வீசப்பட்ட ஒரு கணை. அதன் பாதிப்பை முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவனும் உணர்ந்திருந்தான். எனவே பொறுப்பாளர்கள் விவகாரத்தை கையாளுமட்டும் சமூகம் கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டது. அதுமட்டுமல்லஹலால் விவகாரம் ஒரு நாளோடு முடிவடைவதல்ல. அது இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் இருப்போடு தொடர்பானதொரு பாரிய விவகாரமாகும். அதில் சமூகத்தரப்பினர்கள் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்கவோ தாம் நினைத்தவாறு செயற்படவோ முன்வரவில்லை.
பிறை விவகாரம் அவ்வாறானதல்ல. அது ஒரு நாளோடு முடிவடைந்து விடுகிறது. அத்துடன் முடிவு அவசராமாகத் தேவைப்படும் விவகாரமும் கூட. அதுமட்டுமல்ல நோன்பு நோற்பது ஹராமா?பெருநாள் கொண்டாடுவது ஹராமாஎன்று சிந்தனையைக் குழப்பும் சீரியஸான ஒரு மார்க்கப்பிரச்சினையுமாகும். இதனை ஆற - அமர விட்டுத் தீர்க்க முடியாது. 'இரண்டு மணித்தியாலங்கள் நாம் இதற்காக செலவிட்டோம்என ஜம்இய்யதுல் உலமா கூறுவதை குறைத்து மதிப்பிடாவிட்டாலும் இன்னும் சில மணித்தியாலங்கள் செலவிட்டு சமூகம் குழம்பாமல் தடுக்க முடிந்திருந்தால் அதனைப் பிழை என்று யார் கூறுவார்கள்?
சமூகத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் தலைவர்கள் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை அறிந்திருக்க வேண்டும். மூன்று வகையில் ஒரு சமூகத்தின் கட்டுப்பாட்டை எதிர்பார்க்கலாம். அந்த மூன்றுக்கும் உரிய கவனத்தைக் கொடுக்காமல் கட்டுப்படும் தன்மையை சமூகத்தில் எதிர்பார்க்க முடியாது. இதற்கு மாற்றமாகதலைமைத்துவமிருக்கிறது எனவே கட்டுப்படுங்கள். அந்தத் தலைமைத்துவம் தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் கட்டுப்படுவது கடமையே என்று கூறி சமூகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லை.
ஒரு சமூகம் பின்வரும் மூன்று நிலைகளில் ஒரு தலைமைக்குக் கட்டுப்படலாம்.
1.அதிகாரம்
2.பக்தி சிரத்தை
3.விளக்கம்
அதிகாரம்: இலங்கை முஸ்லிம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டபூர்வமாக எவரிடமுமில்லை. யாரும் யாருக்கும் அந்த அதிகாரத்தை வழங்கவுமில்லையாரும் எவரிடமிருந்தும் அந்த அதிகாரத்தைப் பெறவுமில்லை. ஒரு அரசின் தலைவராக இல்லாதவரை ஒரு சமூகத்தைக்கட்டுப்படுத்தும் அதிகாரம் தனக்கிருப்பதாக எவரும் வாதிட முடியாது. இத்தகைய அதிகாரம் தன்னிடமிருந்தால் அதன் மூலம் சமூகத்தைக்கட்டுப்படுத்துவதும் அதற்குக் கட்டுப்படுமாறு கூறுவதும் கட்டுப்பாட்டின் ஒரு வகையைச் சேர்ந்ததாகும்.
பக்தி சிரத்தை: இந்தக் கட்டுப்பாடு தலைவர் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் வருவதாகும். தலைவர் எதைச்சொன்னாலும்ஏன்எதற்குஎன்று கேட்காமல் கட்டுப்படும் நிலையை இது குறிக்கிறது. விவகாரங்களை தெளிவாக விளங்கினாலும் சரிவிளங்காவிட்டாலும் சரி தலைவர் மீதுள்ள பக்தி சிரத்தை இந்தக்கட்டுப்பாட்டைத் தோற்றுவிக்கும். இதன் போது கட்டுப்படுபவர்கள் தலைவர் சரியாபிழையாஎன்று கூடப்பார்க்க மாட்டார்கள். எங்களது தலைவர் சொல்லிவிட்டார். எனவே அது சரியாகத்தானிருக்கும் என்பதே இத்தகையவர்களது நம்பிக்கை.
விளக்கம்: ஒன்றைக் குர்ஆன்ஸுன்னா அடிப்படையிலும் விஞ்ஞான ரீதியாகவும் விளங்கிக்கட்டுப்படுவதை இது குறிக்கும். தெளிவானதொரு விளக்கம் கிடைக்கின்ற போது சமூகத்தில் இந்த வகையான கட்டுப்பாடு அதிகரிக்கின்றது. இத்தகைய கட்டுப்பாட்டையே தலைமைத்துவங்கள் பெரிதும் வரவேற்க வேண்டும். தமது அதிகாரத்தின் மூலம் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதையோ அல்லது தம்மீது சந்தேகம் கொள்ளாமல் கேள்வி கேட்காமல் சொன்னதை அப்படியே செய்துவிட்டுப் போக வேண்டும் என்ற வகையான கட்டுப்பாட்டையோ இஸ்லாமியத் தலைவர்கள் மக்களிடம் எதிர்பார்க்கக் கூடாது.
தெளிவான மார்க்க விளக்கத்தினூடாகவும் தர்க்கரீதியான விஞ்ஞான விளக்கங்களினூடாகவும் சமூகத்தை அறிவூட்டி கட்டுப்பட வைப்பதே கட்டுப்பாடுகளில் சிறந்தது. தலைவர் வஹி அறிவிக்கப்படும் ஒரு நபியாக இருந்தால் பக்தி சிரத்தையோடு அவருக்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறுமில்லை. தலைவர் ஆட்சியதிகாரத்தைக் கொண்டவராக இருந்தால்அதிகாரத்தின் மூலம் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இடமுண்டு என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இரண்டுமில்லாத நிலையில் தலைவர்கள் தெளிவான விளக்கங்களை மக்கள் முன் வைத்து சமூகத்தைக் கட்டுப்படுத்த முயல்வதே சிறந்தது.
பிறை விடயத்தில் இத்தகையதொரு தெளிவான விளக்கம் சமூகத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குத் தான் சமூகத்திற்குப் பிறை தொடர்பான இத்தகையதொரு விளக்கம் கிடைக்கிறது முக்கால் நாள் சமூகம் விளக்கமின்றி குழப்பத்தில் சிக்கித்தவித்ததன் பின்னர்...
விளக்கம் சொல்ல வேண்டியவர்கள் அதுவரை சமூகத்தை அதன் போக்கில் விட்டிருந்தார்களோ அல்லது சமூகம் விளக்கமின்றியே கட்டுப்படுமென்று எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை. சமூகத்தை யார் யாரோ வழிநடாத்தி தீர்மானங்களை எடுத்து கருமமாற்றி முடிந்ததன் பிறகு... பெருநாள் கொண்டாடியவர்கள் பெருநாள் கொண்டாடியதன் பிறகு... நோன்பை விட்டவர்கள் நோன்பை விட்டதன் பிறகு... விமர்சனங்கள் செய்தவர்கள் முடிந்தமட்டும் விமர்சனம் செய்த பிறகு சமூகத்திற்கு விளக்கம் கிடைத்தது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு பத்வாவையும் ஒரு வினாவுக்கான விடையையும் தவிர விளக்கம் உண்மையில் திருப்திகரமாகவே இருந்தது.
வினா இது தான்: வானவியல் நுட்பங்களை அறிந்த சர்வதேச மற்றும் உள்ளுர் நிபுணர்களின் வழிகாட்டலுக்கேற்ப இலங்கையில் புதன் மாலை வெற்றுக்கண்களுக்கு பிறை தெரிவதற்கான வாய்ப்பே இல்லாதிருந்தால் பிறை தீர்மானிக்கும் மாநாட்டை அன்று ஏன் கூட்ட வேண்டும்பிறை பார்க்குமாறும் பிறை கண்டால் அறியத்தருமாறும் மக்களுக்கு ஏன் வேண்டுகோள் விடுக்க வேண்டும்?
இதனைவிட புதன் மாலை மாநாட்டைக் கூட்டி வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குக் கொடுத்த விளக்கத்தை அப்போது கொடுத்திருக்கலாமல்லவா. அல்லது செவ்வாய் பின்னேரம் மாநாட்டைக் கூட்டி இந்த விளக்கத்தைக் கொடுத்த பின் புதன் மாலை பிறை தீர்மானிக்கும் மாநாடு நடைபெறமாட்டாது என்பதை அறிவித்திருக்கலாமல்லவாஅப்போது ஊர் மட்டங்களில் தீரமானமெடுக்கும் பொறுப்புதாரிகள் ஜம்இய்யதுல் உலமாவின் முடிவுடன் பெரும்பாலும் உடன்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கலாம். சமூகத்தில் ஏற்பட்ட குழப்பங்களையும் தவிர்த்திருக்கலாம்.
தலைப்பிறையைப் பிரகடனம் செய்ய வேண்டிய பொறுப்பாளர்கள் தேவையான விளக்கத்தை ஏற்கனவே கொடுக்காமல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை காத்திருந்து விட்டு சமூகத்தை மாத்திரம் குறை சொல்வது முறையல்ல.
அந்த விளக்கமின்மையால் நோன்பை விட்டவர்களில் பலர் வருந்தினார்கள். அந்த வருத்தத்துக்கு நாமும் காரணம் என்பதை உணர்ந்து பிறை தீர்மானித்த பொறுப்பாளர்கள் தவ்பா செய்யாமல் நோன்பை விட்டவர்களைப் பாவிகளாக்கி அவர்கள் தவ்பா செய்து நோன்பையும் கழா செய்ய வேண்டும் என்று பத்வாக் கொடுப்பது ஷரீஆ தர்மத்துக்கு எந்தவகையிலும் பொறுத்தமானதல்ல.
ஜம்இய்யதுல் உலமா தலைவரின் விளக்கம் சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டேன். அது சமூகத்திற்கு ஏற்கனவே கிடைத்திருக்க வேண்டும் என்பதும் எனது கருத்து. இருப்பினும் மேற்குறிப்பிட்ட பத்வாவும் மேலே கேட்கப்பட்ட விடையில்லாத வினாவும் கேட்போருக்கு உணர்த்திய உண்மை யாதெனில்,
'சமூகம் நூறு வீதம் குற்றவாளிகள். பொறுப்பாளர்கள் நூறு வீதம் தூய்மையானவர்கள். எனவே சமூகம் தவ்பா செய்ய வேண்டும்.'
சமூகத்தலைவர்களின் மனப்பாங்கு இத்திசையில் தொடர்ந்தும் செல்லுமானால் ஒற்றுமைக் கோஷம் வாய்க்கும் வார்த்தைக்கும் இனிமையாக இருக்கலாம். சமூகம் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிய வண்ணமே இருக்கும்.


உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
usthazhajjulakbar.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter