அப்துல் ரசாக் (லண்டன்)
அண்மையில் நடைபெற்று முடிந்திருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் பெரும் பாலானவர்கள் எதிர்பார்த்தபடியே வெளிவந்திருக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸ் 07 ஆசனங்களைப் பெற்று முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கின்ற சக்தியாக பரிணாமம் பெற்றுள்ளது. எதிர்வரும் புதன் கிழமைக்குள் தமது முடிவை முஸ்லிம் காங்கிரஸ் ஆளுநருக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும்.
பெரும்பாலும்மு.கா. இன்று ஜனாதிபதியுடன் நடைபெறும் கலந்துரையாடலில் முதலமைச்சர் பதவியைக் கோரலாம் அல்லது அதற்குப் பகரமாக மத்தியில் இரண்டு பிரதியமைச்சர் பதவிகளையும் மற்றும் கிழக்கில் இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகளையும் கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன.
நடந்து முடிந்த தேர்தலில் மு.கா. பல வாக்குறுதிகளை முன் வைத்தே தேர்தலில் குதித்தது. அதில் ஒன்றுதான் தான் முதலமைச்சராக கிழக்கின் மாகாண ஆட்சியை நிலை நாட்டுவோம் என்பதாகும். தேர்தல் முடிவுகள் மூலம் தான் ஆட்சியைக் கைப்பற்ற முடியாவிட்டாலும் தன்னால் ஆசீர்வதிக்கப் படாத ஒருத்தர் முதலமைச்சராக வர முடியாதளவுக்கு பலம் பெற்றுள்ளது முஸ்லிம் காங்கிரஸ்.
ஜனாதிபதியுடன் நடைபெறப் போகும் கலந்துரையாடலில் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்து அதற்குப் பகரமாக வேறு சலுகைகளை எடுத்துக் கொள்ளும் முடிவுக்கு மு.கா. வருமானால் யார் அந்த முதலமைச்சராக வரப் போகின்றவர் என்பதுதான் இன்று மு.கா .வுக்காக வாக்களித்த மக்கள் கேட்கப்போகின்ற அடுத்த கேள்விகளாகும்.
இம்முறை நடந்த கிழக்கு தேர்தலில் அரசாங்கத்தை விட்டுப் “பிரித்து”, தனியே தேர்தலில் குதிக்க வைப்பதற்குக் காரணமாக இருந்த அதாவுல்லாஹ்வின் அணியில் வெற்றியீட்டிய மாகாண சபை உறுப்பினர்களுக்கா அல்லது இவரைப்போல் அந்த நாள் முதல் இந்த நாள் வரை முஸ்லிம் காங்கிரசை அரசியல் அரங்கிலே இருந்து அழித்து ஒழிப்பதற்காக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்ற ஏனைய அரச முஸ்லிம் தோழமைக் கட்சிகளின் மாகாண சபை உறுப்பினர்களுக்கா என மு.கா .ஆதரவாளர்கள் கேள்விக்கணை தொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ஆதலால்,எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரச கூட்டமைப்பிலுள்ள முஸ்லிம் தோழமைக் கட்சிகளின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர், முதலமைச்சராக நியமிக்கப்படுவதற்கு மு.கா. ஒருபோதும் துணை போகாதென்றே அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். தன்னை கொலை செய்வதற்கு காத்திருக்கும் ஒருவனிடம் வலிந்து கத்தியைக் கொடுப்பதற்கு ஒப்பாகும் செயற்பாடே, மு.கா. முதலமைச்சர் பதவியை அரசிலுள்ள முஸ்லிம் தோழமை அணிகளுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதாகும் எனவும் மக்கள் கருதுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக