ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய அரசில் எந்த அமைச்சு பதவிகளையும் கோரவில்லை என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை
ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள்
சுதந்திர கூட்டமைப்பிடம் அமைச்சு பதவிகள் கோரியதாக ஊடகங்களில் வெளியான
செய்திகள் முற்றிலும் பொய்யானது என அவர் குறிப்பிட்டார்.
“முஸ்லிம்
சமூகத்தின் பிரச்சினைகளுக்காக அரசாங்கத்திலிருந்து கொண்டு குரல்
கொடுப்போம். தற்போதைய சூழலில் முஸ்லிம் சமூகத்திற்கு நிறைவேற்ற வேண்டிய சில
விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த
விடயங்கள் மிக விரைவில் அமுல்படுத்தப்படும்’ என அவர் தெரிவித்தார்.
“அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தமிழ்,
முஸ்லிம் மற்றும் சிங்கள ஆகிய மக்களிற்கு சிறந்த சேவையை ஆற்றுவதற்கு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாடுபடும். இதனால் எந்தவொரு சமூகத்திற்கும்
பாதிப்பில்லாமல் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்’ என அமைச்சர் ஹக்கீம்
குறிப்பிட்டார்.
“கிழக்கு மாகாண ஆட்சியை அமைத்தல் தொடர்பில்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய
கட்சிகளுடன் பேச்சு நடத்தினோம். இதன் பின்னரே ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது’ என அவர்
தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தினால் தமிழ் தேசிய
கூட்டமைப்பு ஏமாற்றமடைந்திருக்கலாம். எனினும் எதிர்காலத்தில் தமிழ் தேசிய
கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சினேகபூர்வமாக செயற்படும் என
அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார். (Courtesy: Tamil Mirror)