நபிகள் நாயகத்தை அவதூறாக சித்திரித்து, படம் தயாரித்து, பல்வேறு நாடுகளில் வன்முறைக்குக் காரணமான தயாரிப்பாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக வர்த்தக மைய கோபுரம், தகர்க்கப்பட்ட நினைவு தினம், செப். மாதம் 11ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அமெரிக்காவில், "முஸ்லிம்களின் அப்பாவித்தனம்' என்ற பெயரில், ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில், நபிகள் நாயகத்தை கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள், இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
எகிப்து, லிபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில், இது தொடர்பாக பெரிய வன்முறை ஏற்பட்டது. லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில், அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டார்.
இந்தப் படத்தை தயாரித்தவர், எகிப்து நாட்டைச் சேர்ந்த நகோலா பாஸ்லி. தற்போது கலிபோர்னியாவில் வசிக்கிறார். வங்கி மோசடி தொடர்பாக, 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நகோலா, கடந்த ஆண்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஜாமினில் இருந்த காலத்தில், அவர் நன்னடத்தை விதியை மீறியதாகக் கூறி, செப். மாதம், மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மூன்று பெயர்களில் இவர் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதனால், 4.5 கோடி ரூபாய் அளவுக்கு இவர் இழப்பை ஏற்படுத்தியதாக, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இந்த குற்றத்துக்காக, நகோலா பாஸ்லிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
"நபிகள் நாயகத்தை பற்றி, அவதூறான படம் தயாரித்த நகோலாவை கொல்பவர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும்' என, பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், அறிவிப்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-Dinamalar-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக